பாரம்பரியமிக்க கட்சியை அபகரிக்கச் சதி : ஆனந்தசங்கரி விடுத்துள்ள வேண்டுகோள்!
தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு பாரம்பரியமிக்க கட்சி. இதனை பொய்களை வாரி வழங்கும் ஒரு குழுவினர் தந்திரமாக அபகரிக்கத் திட்டமிட்டு செயற்பட்டுவருவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி ( V. Anandasangaree) தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அந்த குழுவினரை கட்சியின் ஆதரவாளர்களும் மக்களும் நம்பவேண்டாம் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழர் விடுதலைக் கூட்டணி பொதுக்குழு மத்திய செயற்குழு உறுப்பினர்களுக்கு அன்பான வேண்டுகோள்.
தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு பாரம்பரியமிக்க கட்சி. இதனை பொய்களை வாரி வழங்கும் ஒரு குழுவினர் தந்திரமாக அபகரிக்கத் திட்டமிட்டு என்மேல் அவதூறு சொல்லி என்னை அவமானப்படுத்தி கட்சி ஆவணங்களையும், அலுவலகத்தையும் அபகரிக்கத்திட்டமிட்டுள்ளனர்.
அது மட்டுமல்லாமல் நாளை நடவடிக்கைக் குழுவைக் கூட்ட இருப்பதாகவும் 29.01.2022 அன்று நடைபெறவிருக்கும் கூட்டத்தில் நியமனங்களை வழங்க இருப்பதாகவும் அறிகிறேன்.
இதில் கலந்துகொள்வது சட்டவிரோதமான செயலாகும். ஆதலால் தயவு செய்து சட்டவிரோதமான இக்கூட்டத்தில் கலந்துகொள்ளாதீர்கள்.
இந்த மோசடிக்கார்களுக்கெதிராக எனது சட்டத்தரணி மூலம் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளேன். இந்த மோசடிக்காரர்களை மக்கள் நம்மவேண்டாம்.
அதேவேளை அவர்களுடன் எவ்வித தொடர்பும் வைக்க வேண்டாம் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் அனைத்து ஆதரவாளர்களையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.