ஆசிரியர் சேவையில் இணைக்கப்படவுள்ள 30,000 பேர் : பிரதமர் அறிவிப்பு
இலங்கையின் வரலாற்றில் முன்னெடுக்கப்படும் மிகப்பெரிய ஆசிரியர் நியமனத் திட்டத்தின் கீழ், இந்த ஆண்டில் மாத்திரம் சுமார் 30,000 புதிய ஆசிரியர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் உள்ள வடமத்திய மாகாண கல்வி அதிகாரிகளுடன் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த விசேட நியமனத் திட்டத்தின் கீழ் கல்வித் துறையின் பல்வேறு பிரிவுகளுக்குப் புதியவர்கள் உள்வாங்கப்படவுள்ளனர்.
23,000 பட்டதாரிகள்
அதன்படி, 23,000 பட்டதாரிகளும், தேசிய கல்வியியற் கல்லூரிகளில் பயிற்சி பெற்ற 6,100 ஆசிரியர்களும்,கல்விக்கான பிரத்தியேகப் பட்டங்களை (B.Ed) முடித்த பட்டதாரிகளும் இதில் உள்வாங்கப்படுவர்.

மேலும், கல்வித் துறையை மேலும் வலுப்படுத்துவதற்காக, எதிர்காலத்தில் கல்வி நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஆசிரியர் ஆலோசகர்களை படிப்படியாக நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது மாத்திரம் கல்வித் துறை மேம்பாட்டிற்குப் போதுமானதாக அமையாது, ஆசிரியர்களின் முறையான பரவலாக்கம், கல்வி நிர்வாகம் மற்றும் தரவு முகாமைத்துவம் சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும்.
கல்வித் துறையில் அரசாங்கம் பாரிய முதலீட்டை மேற்கொண்டு வருகின்றது, நாட்டின் பிள்ளைகளுக்குத் தரமான கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டே அனைத்து முயற்சிகளும் திசைதிருப்பப்பட வேண்டும்“ என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |