இடமாற்றத்தில் வெடித்த சர்ச்சை : போராட்டத்தில் குதித்த ஆசிரியர்கள்
ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தாய்மொழி ஆசிரியர் சங்கம் வடமாகாண ஆளுநர் தலைமை செயலகத்துக்கு (Secretariat of the Governor of Northern Province) முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டம் இன்று (04) யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்னால் ஆரம்பித்து ஆளுநர் செயலகம் வரை பேரணியாக சென்ற நிலையில் காவல்துறையினர் ஆளுநர் செயலகத்துக்குள் அனுமதிக்காமல் வாசலில் தடுத்து நிறுத்தினர்.
பின்னர் போராட்டத்தில் கலந்து கொண்ட சிலரை மட்டும் உள்ளே சென்று ஆளுநருடன் பேசலாம் என தெரிவித்த நிலையில் மட்டுப்படுத்தப்பட்ட ஆசிரியர்கள் ஆளுநரை சந்திப்பதற்காக அனுமதிக்கப்பட்டனர்.
மகஜர் ஒன்றை கையளித்தனர்
இதன்போது ஆசிரியர்கள் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகனிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மகஜர் ஒன்றை கையளித்தனர்.
இதன்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், யாழில் இருந்து வெளி மாகாணங்களுக்கு ஆசிரியர் சேவையை செய்தவர்கள் மீண்டும் வெளி மாவட்டங்களுக்கு பணி இட மாற்றம் வழங்கப்படுகிறது.
ஆசிரியர்கள் மருத்துவ காரணங்களுக்காக தமது வெளி மாவட்ட இடமாற்றங்களை இரத்து செய்யுமாறு மேன் முறையீடு வழங்கப்பட்டுள்ள நிலையில் அதனை கருணை அடிப்படையில் பரிசீலனை செய்ய வேண்டும்.
கோஷங்களை எழுப்பினர்
வெளிமாவட்டம் செல்லாது பல ஆசிரியர்கள் தொடர்ந்தும் யாழ் மாவட்டத்தில் சேவையாற்றி வரும் நிலையில் பாரபட்சமின்றி இடமாற்றங்களை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை ஆளுநரிடம் முன்வைத்திருக்கிறோம்.
குறித்த விடயங்கள் தொடர்பில் சாதகமாக பரிசீலனை செய்து விரைவில் அறிவிப்பதாக ஆளுநர் தெரிவித்ததார்“ என குறிப்பிட்டனர்.
இதேவேளை ”எங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்”, ”வெளி மாகாணம் என்ன வேறு நாடா”, ”ஆசிரியர் இடமாற்றம் மூலம் குடும்பத்தை சிதைக்காதே”, ”சேவையின் தேவை கருதிய இடமாற்றத்தில் ஆசிரியர்களின் அவர்களின் உறவினர்களின் மருத்துவ சான்றிதழை கருத்தில் கொள்”, ”இடமாற்ற கடிதத்தில் காலத்தை வரையறை செய்”, ”அதிகாரிகளே நாட்டின் சனப்பெருக்கத்தை குறைக்காதே” ஆகிய கோஷங்களை எழுப்பியவாறு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
