தீ மிதிப்பில் கலந்து கொண்டவர்களுக்கு தொற்றியது கொரோனா
மட்டக்களப்பு வாகரை ஊரியன் கட்டு பேச்சியம்மன் ஆலயத்தில் தீ மிதிப்பு உற்சவ வழிபாட்டில் கலந்து கொண்ட 56 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வை.விவேக் தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமையன்று மேற்படி ஆலயத்தில் இறுதி உற்சவமான தீ மிதிப்பு நிகழ்வு இடம்பெற்று விழாக்கள் அனைத்தும் முடிவுற்றது. இவர்களில் சிலர் வழமைக்கு மாறான நிலையில் நோய் வாய்ப்பட்டுள்ளனர். அவர்களில் 13 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் போது 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வாகரை பிரதேசத்தில் முதற் தடவையாக அதிகளவு எண்ணிக்கையானோர் கொரோனா தொற்றினால் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் கடந்த ஏழு நாட்களுக்குள் கொவிட் தொற்றினால் வாகரையில் இருவர் மரணமடைந்துள்ளனர்.
இதேவேளை வாகரை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் கொரோனா நோய் தொற்றில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வாகரை சுகாதார வைத்திய அதிகாரி வை.விவேக் மேலும் தெரிவித்தார்.
ஆபத்தான நிலமையினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் வைத்திய அதிகாரி தலைமையில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகஸ்தர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.



