கொடிகாமம் சந்தை வியாபாரிகள் 17 பேருக்கு கொரோனா தொற்று
கொடிகாமம் சந்தை வியாபாரிகள் மற்றும் கடை வியாபாரிகள் 84 பேரிடம் பெறப்பட்ட PCR பரிசோதனையில் 17 வியாபாரிகளுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
நேற்று யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே 17 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது.
கொவிட் அபாயம் காணப்பட்டும் சந்தை முடக்கப்படவில்லை, பதிலாக தொற்று உறுதியானவர்களது வியாபார நடவடிக்கை மாத்திரம் நிறுத்தப்பட்டு மரக்கறி, மீன் வியாபார நடவடிக்கைக்காக இன்று சந்தை வழமை போல திறக்கப்பட்டுள்ளது. சந்தைக்குள் ஒரு சில மரக்கறி மற்றும் மீன் வியாபாரிகள் மாத்திரம் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த போதும் ஓரிருவரே கொள்வனவில் ஈடுபட்டதைக் காணமுடிந்தது.
தற்போது கொவிட் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் அதிலும் வியாபாரிகள் 17 பேருக்கு தொற்றுறுதியான நிலையில் சந்தை முடக்கப்படாத நிலையில் திறந்துவிடப்பட்டுள்ளமையானது தென்மராட்சி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்மைக் காலமாக கொடிகாமம், வரணி, எழுதுமட்டுவாழ்,மிருசுவில், மீசாலை வடக்கு, சாவகச்சேரி, கைதடி போன்ற இடங்களில் அதிகளவான தொற்றாளர்கள் எழுமாற்றுப் பரிசோதனையின் போது இனங்காணப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கொடிகாமம் சந்தை முடக்கப்படாது வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள விட்டுள்ள சுகாதார பிரிவினரின் நடவடிக்கை குறித்து மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.