சாதாரண தர பரீட்சை மதிப்பீட்டுப் பணிகள் விரைவில் ஆரம்பம்
2022ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையின் முதற்கட்ட மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த மதிப்பீட்டு நடவடிக்கைகள் எதிர்வரும் 27ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 100 மதிப்பீட்டு நிலையங்களில் இடம்பெறவுள்ளதாக பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் லசிக சமரகோன் குறிப்பிட்டார்.
இந்த மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஓகஸ்ட் 27 ஆம் திகதி வரை இடம்பெறும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
2.6 மில்லியன் விடைத்தாள்கள்

இந்த பரீட்சைக்காக 472,554 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்திருந்தனர், பரீட்சார்த்திகளின் சுமார் 2.6 மில்லியன் விடைத்தாள்கள், அதாவது கிட்டத்தட்ட 90% ஆனவை இந்தக் கட்டத்தில் மதிப்பீடு செய்யப்படுகின்றன. 27,500 ஆசிரியர்கள் மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலை விடுமுறை நாட்களில் இந்த மதிப்பீட்டு நடவடிக்கைகள் நடைபெறும் எனவும் , மதிப்பீட்டு நடவடிக்கைகள் காரணமாக எந்த பாடசாலையும் மேலதிகமாக மூடப்படாது எனவும் அவர் தெரிவித்தார்.
அதன்படி, 56 நகரங்களில் உள்ள 100 மதிப்பீட்டு நிலையங்களில் மதிப்பீட்டு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளது எனக் குறிப்பிட்டார்.