ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிரான வழக்கு : நீதிமன்றின் உத்தரவு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 சந்தேகநபர்களுக்கு எதிரான முறைப்பாட்டை எதிர்வரும் ஒகஸ்ட் 17ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (16) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2022ஆம் ஆண்டு கொழும்பு, சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் சட்டவிரோதமான முறையில் வீதி நாடகம் ஒன்றை அரங்கேற்றியதன் மூலம் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாகக் சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது
இந்த முறைப்பாடு இன்று கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக கறுவாத்தோட்டம் காவல்துறையினர் நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தினர்.

மேலதிக அறிவுறுத்தல்களைப் பெற்றுக்கொள்வதற்காக விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
இதனையடுத்து, அந்த நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை அறிவிப்பதற்காக இந்த முறைப்பாட்டை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 17ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |