கொவிட் கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்க அரசாங்கம் தீர்மானம்
இலங்கையில் நடைமுறையில் உள்ள அனைத்து கொவிட் கட்டுப்பாடுகளையும் நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எவ்வாறெனினும், கொவிட் தொடர்பிலான சுகாதார நடைமுறைகள் தொடர்ந்தும் பின்பற்றப்பட வேண்டுமென சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
மார்ச் மாதத்திற்கு பொருந்தக்கூடிய புதிய சுகாதார வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ள சுகாதார அமைச்சு, திருமணங்கள் தவிர ஏனைய அனைத்து நிகழ்வுகள் மற்றும் செயற்பாடுகளுக்கு முழுமையான அனுமதியை வழங்கியுள்ளது.
இதற்கமைய, உணவகங்கள், கடைகள், பலசரக்கு கடைகள், பல்பொருள் அங்காடிகள், வங்கிகள், திரையரங்குகள், பார்வையாளர்களுடனான விளையாட்டு நிகழ்வுகள், மேலதிக வகுப்புகள் மற்றும் இறுதிச் சடங்குகளுக்கு ஒதுக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட திறன் நீக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் சுகாதார வழிகாட்டுதல்களின் கீழ் செயற்பட பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எனினும், வழமையான அதிகபட்சமாக 75 சதவீதம் அனுமதிக்கப்படும் தனியார் கூட்டங்கள், திருமணங்கள் மற்றும் கண்காட்சிகளுக்கு வரையறுக்கப்பட்ட அளவு தொடர்ந்து நடைமுறையில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மத ஸ்தலங்களுக்கு குறிப்பிட்ட வழிகாட்டுதல்கள் எதுவும் இல்லை, எனினும் சுகாதார அமைச்சு வழங்கிய வழிகாட்டுதல்களுக்கு அமைய விசேட திருவிழாக்கள் மற்றும் நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுக்கூட்டங்கள் மற்றும் கூட்டங்களை நடத்துவதற்கு முன்னதாகவும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் முன் அனுமதி பெறுவது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.