வடக்கில் நாளை போக்குவரத்துசேவை ஸ்தம்பிக்கும் அபாயம்
போக்குவரத்துசேவை ஸ்தம்பிக்கும் அபாயம்
இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். சாலை ஊழியர்கள் நாளைய தினம்(24) பணிப்பகிஷ்கரிப்பினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர்.
யாழ். சாலை முடங்குவதால் அதனுடன் இணைந்த சாலைகளின் செயற்பாடுகளும் பாதிக்கப்படுமென யாழ் சாலை ஊழியர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் யாழ். சாலை ஊழியர்கள் இதனை கூட்டாக அறிவித்தனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
இ.போ.ச பேருந்தின் சாரதி மற்றும் காப்பாளர் மீது தாக்குதல்
நேற்று(22) இரவு 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட 57 வழித்தட இ.போ.ச பேருந்தின் சாரதி மற்றும் காப்பாளர் இருவரும் கல்கமுவ சாலை இ.போ.ச சாலை ஊழியர்களினால் தலாதகம எனும் பகுதியில் தாக்கப்பட்டுள்ளனர்.
இத் தாக்குதல் சம்பவத்தை மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம். இந்த தாக்குதலை நடாத்திய ஊழியர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களே எமது சக ஊழியர்களை தாக்கியது எமக்கு மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலோடு தொடர்புபட்ட ஊழியர்களை உடனடியாக காவல்துறையினர் கைதுசெய்து உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டா விட்டால் நாளைய தினம் இலங்கைப் போக்குவரத்து சபையின் யாழ். சாலை வட பிராந்திய சாலைகளுடன் இணைந்து தொழிற்சங்க போராட்டங்களை முன்னெடுக்க இருக்கின்றோம் - என்றனர்.
