தீர்ப்பு வெளிவரும் வரை பதவியேற்கமாட்டேன்! தம்மிக்க பெரேராவின் அறிவித்தல்
இரண்டாம் இணைப்பு
நீதிமன்ற தீர்ப்பு வெளியாகும் வரை நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது அமைச்சராகவோ பதவியேற்றப் போவதில்லை என்று தம்மிக்க பெரேரா உறுதியளித்துள்ளார்.
தம்மிக பெரேராவின் நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் மீதான விசாரணையின் போதே அவர் உயர் நீதிமன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மூன்று நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணை இடம்பெற்ற போதே, அரச தலைவர் சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா ஊடாக அவர் இதனை அறிவித்துள்ளார். அத்தோடு ஐந்து அடிப்படை உரிமை மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனை நாளைய தினம் எடுத்துக்கொள்ளப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா நாளை தினம் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினராக, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொள்ள உள்ளார்.
அத்துடன் தம்மிக்க பெரேரா முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராகவும் பதவியேற்க உள்ளார். முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, தம்மிக்க பெரேரா, பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளார்.
தம்மிக்க பெரேரா, முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து அமைச்சின் செயலாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தம்மிக்க பெரேரா, இலங்கையில் உள்ள கசினோ உட்பட பல வர்த்தகங்களின் உரிமையாளர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.