சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குழந்தை உயிரிழப்பு - பெற்றோர் சந்தேகம்!
கொழும்பு, சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த எட்டு மாத குழந்தை உயிரிழந்தமை தொடர்பில் பெற்றோர் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த குழந்தைக்கு மருந்தொன்று வழங்கப்பட்டதன் பின்னரே நோய் தீவிரமடைந்து உயிரிழந்துள்ளதாக அவிசாவளை பிரதேசத்தைச் சேர்ந்த குழந்தையின் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அவிசாவளை எபலபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் எட்டு மாத குழந்தை டெஷான் விதுநெத் சுகயீனம் காரணமாக கடந்த ஓகஸ்ட் 4 ஆம் திகதி அவிசாவளை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பொருத்தமற்ற மருந்து

பின்னர், மேலதிக சிகிச்சைக்காக ஓகஸ்ட் 5 ஆம் திகதி கொழும்பு, சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
குழந்தைக்கு நோய் இருப்பதை உறுதி செய்யாமல் யூகத்தின் அடிப்படையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாகவும் அப்போது கொடுக்கப்பட்ட வலிப்பு எதிர்ப்பு மருந்து காரணமாக குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும் பெற்றோர்கள் கூறுகின்றனர்.
இதேவேளை தீவிர சிகிச்சை பெற்று வந்த குழந்தை டெஷான் கடந்த 19ஆம் திகதி உயிரிழந்தார். டெஷானின் உடல் நேற்று (21) பிற்பகல் குடும்ப மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
எவ்வாறாயினும், மருந்து ஒவ்வாமை காரணமாக குழந்தை உயிரிழந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி.விஜேசூரிய மறுத்துள்ளார்.