யாழில் கடமையிலிருந்த பெண் தாதிக்கு நள்ளிரவுவேளை கொலை அச்சுறுத்தல்
பெண் தாதிக்கு கொலை அச்சுறுத்தல்
சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் பணியாற்றும் பெண் தாதிய உத்தியோகத்தர் ஒருவர் இரவுக் கடமையிலிருந்த போது தொலைபேசியில் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் இரு வேறு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
நிர்வாக மட்ட விசாரணையை முன்னெடுத்து அறிக்கை அளிக்குமாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவமனை அத்தியட்சகருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன், சாவகச்சேரி காவல்துறையில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய காவல்துறையினரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சாவகச்சேரி மருத்துவமனையில் பணியாற்றும் பெண் தாதிய உத்தியோகத்தர் கடந்த புதன்கிழமை (ஜூன் 8) நள்ளிரவு கடமையில் ஈடுபட்டிருந்த போது தொலைபேசி ஊடாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.
முடுக்கிவிடப்பட்ட விசாரணைகள்
அது தொடர்பில் மருத்துவமனை அத்தியட்சகரிடம் முறைப்பாட்டை வழங்கிய பெண் தாதிய உத்தியோகத்தர் சாவகச்சேரி காவல் நிலையத்திலும் முறைப்பாடு வழங்கியிருந்தார்.
சம்பவத்தையடுத்து அச்சுறுத்தியவரும் அதே மருத்துவமனையில் கடமையாற்றும் ஆண் தாதிய உத்தியோகத்தர் என காவல்துறை புலன் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து சம்பவம் தொடர்பில் அறிக்கையளிக்குமாறு சாவகச்சேரி மருத்துவமனை மருத்துவ அத்தியட்சகருக்கு பணித்துள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

