ஞானசாரதேரருக்கு உயிர் அச்சுறுத்தல் : செய்தியாளர் மாநாட்டில் பகிரங்கம்
மட்டக்களப்பு - ஏறாவூர் மசூதியொன்றில் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதாக பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் (Galagoda Aththe Gnanasara) தெரிவித்துள்ளார்.
சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய இஸ்லாமிய தீவிரவாதம் இலங்கையில் பரவுவது குறித்து சமீபத்தில் தான் தகவல்களை வெளியிட்டதை தொடர்ந்தே இவ்வாறு மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்தியாளர் மாநாடு ஒன்றில் வைத்து அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவிப்பு
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு இது குறித்து உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளேன். நாட்டில் தீவிரவாத நடவடிக்கைகள் மற்றும் மதபதற்றம் ஆபத்தான விதத்தில் அதிகரித்துள்ளதை இது வெளிப்படுத்துகின்றது என குறிப்பிடடார்.
ஏறாவூரின் பாரம்பரிய முஸ்லிம் சமூகம் தீவிரவாத ஒடுக்குமுறை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது, எனது உதவியை கோரியுள்ள அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்கள் மத்தியில் உள்ள தீவிரவாத சக்திகள் குறித்து தகவல்களை வழங்கியுள்ளதுடன் இவற்றை பகிரங்கப்படுத்துமாறு கோரியுள்ளனர் என தெரிவித்தார்.
லிபியா கடாபி குழுமம் என்ற குழுவினர் வட்ஸ்அப் மூலம் அச்சுறுத்தும் செய்திகளை வெளியிட்டுள்ளனர், தீவிரவாத கொள்கைகளை எதிர்க்கும் நபர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளனர்.
பாதுகாப்பு படையினர்
ஏறாவூரை சேர்ந்த நபர் ஒருவரின் பெயரை வெளியிட்டுள்ள ஞானசார தேரர், அவர் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார், பாதுகாப்பு படையினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
ஏறாவூரில் நிலைமை கவலைக்குரியதாக உள்ளதாகவும் உள்ளூர் சுபிமுஸ்லீம்கள் கடும் பாதுகாப்பிற்கு மத்தியிலேயே மசூதிக்கு செல்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
ஏறாவூர் சுபி சங்கத்தின் செயலாளர் தீவிரவாத நடவடிக்கைகளை எதிர்ப்பவர் எனவும் அவர் தன்னை தொடர்புகொண்டு, அமைதியை விரும்பும் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல் குறித்து பேசினார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

