சிறிலங்காவின் கடன் மறுசீரமைப்பு திட்டம் தொடர்பில் வெளியான தகவல்
இலங்கை தனது கடன் மறுசீரமைப்பு திட்டத்தை, சர்வதேச கடன் வழங்குநர்கள் உடனான இன்றைய சந்திப்பின் போது உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நிதி ஆலோசகர்களான க்லிபோர்ட் சான்ஸ் (Clifford Chance) மற்றும் லசார்ட் (Lazard) ஆகியோரின் உதவியுடன் இலங்கை கடன் மறுசீரமைப்பு வேலை திட்டத்தை வகுத்துள்ளதெனவும் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்றைய தினம்(22) நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.
உத்தரவாதங்களை பெற வேண்டும்
இலங்கை தனது கடன் மறுசீரமைப்பு குறித்த திட்டங்களை கடன் வழங்குநர்களிடம் முன்வைப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் உதவும் எனவும் இது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல் முறையை, முறையாக தொடங்கி வைக்கும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச வர்த்தக நிறுவனங்களால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள இறையாண்மை பத்திரங்களின் படி பெரியளவிலான கடன் தொகையை சிறிலங்கா அரசாங்கம் பெற்றுள்ளது எனவும் இலங்கைக்கு முக்கிய இருதரப்பு கடன்களை சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் வழங்கியுள்ளன அதேவேளை சில அண்டை நாடுகளும் வழங்கியுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பான தனது பிரேரணையை முன்வைத்து நிதி உதவியை வழங்க தொடங்குவதற்கு, இலங்கை தனது சர்வதேச கடன் வழங்குநர்களிடமிருந்து நிதி உத்தரவாதங்களை பெற வேண்டும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
முன்னேற்றத்திற்கான முதல் படி
இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு கடன் வழங்குநர்கள் ஆதரவளிப்பதாக உறுதியளிக்க வேண்டுமெனவும் அவர்களின் உறுதிப்பாடு இலங்கையின் முன்னேற்றத்திற்கான முதல் படி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக சிறிலங்கா அரசாங்கம் ஏனைய வர்த்தக கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்துடனான கடன் மறுசீரமைப்பு திட்டதுக்கு இணக்கம் தெரிவிக்கா விட்டால் இலங்கையின் பொருளாதாரத்தை சீர்செய்வதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்காதென நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற சிறிலங்கா அரசாங்கம் 16 தடவைகள் நிதியத்தை நாடியிருந்ததாகவும் 16 சந்தர்ப்பங்களுடன் ஒப்பிடும்போது 17 ஆவது தடவை வேறுபட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அதிக வட்டி வீதங்கள் அறவிடப்படும் இவ்வாறான சூழ்நிலையில், நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதும், வளர்ச்சியை நோக்கி கொண்டுசெல்வதும் மிக முக்கியமானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.