டெல்டா, ஆல்பா வைரஸ்களுக்கு சிறந்த தீர்வு - தாய்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
சினோவாக், அஸ்ட்ராசெனேகா ஆகிய தடுப்பூசிகளை கலந்து போட்டால் டெல்டா, ஆல்பா ஆகிய உருமாறிய வைரஸ்களுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்று தாய்லாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
டெல்டா, ஆல்பா ஆகிய உருமாறிய கொரோனா வைரஸ் ரகங்கள், மிகவும் ஆபத்தானவையாக கருதப்படுகின்றன. அந்த வைரஸ்களில் இருந்து பாதுகாப்பது தொடர்பாக தாய்லாந்து நாட்டு விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர்.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்கள், சாதாரண மக்கள் ஆகியோரைக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இதன் முடிவுகளின் படி,
சினோவாக் தடுப்பூசியில் 2 டோஸ் போட்டுக்கொண்டால், ஆல்பா வைரசுக்கு எதிராக போதிய நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். ஆனால், டெல்டா வைரசுக்கு எதிராக பாதுகாப்பு கிடைக்குமா என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது.
சினோவாக் தடுப்பூசியில் ஒரு டோசும், அஸ்ட்ராசெனேகா தடுப்பூசியில் ஒரு டோசும் கலந்து போட்டுக்கொண்டால், அதைவிட அதிக நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.90 சதவீதத்துக்கு மேல் செயல்திறன் இருக்கும்.
அதே சமயத்தில், சினோவாக் தடுப்பூசியில் 2 டோசும், அஸ்ட்ராசெனேகா தடுப்பூசியில் ஒரு டோசும் தொடர்ச்சியாக போட்டுக்கொண்டால், 99 சதவீத செயல்திறன் இருக்கும். அது, டெல்டா, ஆல்பா ஆகிய இரு உருமாறிய வைரஸ்களுக்கு எதிராகவும் போதிய நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும்.
டெல்டா வைரசுக்கு எதிராக மாடர்னா தடுப்பூசியும் போதிய பாதுகாப்பு அளிக்கும்.
ஆனால், தாய்லாந்தில் அதற்கு தட்டுப்பாடு நிலவுவதால், உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணியாளர்களுக்கு இந்த கலவை, மாற்று தீர்வாக அமையும் என கூறப்பட்டுள்ளது.