ஆரோக்கியமான சிறார்களும் மரணிக்கும் அபாயம் : பெற்றோரே அவதானம்!!
நாட்டில் டெங்கு நோய் அதிகரித்து வருகின்றமையால் பெற்றோர் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ஹசித லியனாராச்சி கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று (24) சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர், டெங்கு நோயானது ஆரோக்கியமான சிறுவர்களைக் கூட மரணம் வரை கொண்டு செல்லக்கூடியளவு அபாயம் மிக்கதெனக் கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,
''தற்போது சிறுவர்கள் கொவிட் மற்றும் டெங்கு என இரு நோய்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையிலுள்ளனர். கொவிட் தொற்றானது தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்ட , நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவுள்ள சிறுவர்களை அதிகளவில் பாதிக்கும்.
ஆனால் டெங்கு நோய் ஆரோக்கியமான சிறுவர்களையும் மரணம் வரை கொண்டு செல்லக்கூடியது.
எனவே சிறுவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் ஏற்பட்டால் பெற்றோர் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றார்.