டெங்கு அச்சுறுத்தல் : முன்பள்ளி மாணவர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
தற்போது நிலவிவரும் டெங்கு அச்சுறுத்தலுக்கு மத்தியில், முன்பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் டெங்கு நுளம்புக்கடியில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பின்பற்ற வேண்டிய நடைமுறை குறித்து மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் கருத்து வெளியிட்டுள்ளார்.
அதன்படி, முன்பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் அவர்களின் கைகளையும் கால்களையும் மறைக்கும் பொருத்தமான ஆடைகளை அணிவதை உறுதி செய்யுமாறு பெற்றோர்களை வலியுறுத்தியுள்ளார்.
தேசிய சிறுவர் வாரத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (13) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கல்வி அமைச்சு அனுமதி
டெங்கு நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக, பாடசாலை மாணவர்கள் தங்கள் கைகளையும் கால்களையும் மறைக்கும் பொருத்தமான ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு வர கல்வி அமைச்சு சமீபத்தில் அனுமதித்ததைத் தொடர்ந்து இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நுளம்புக்கடியால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதன் மூலம், பாடசாலை மாணவர்களிடையே டெங்கு பரவுவதைக் குறைப்பதை இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதே முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முன்பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கும் நீடிக்க வேண்டும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
நுளம்பு விரட்டிகள்
அத்துடன் தேவைப்படும் இடங்களில் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான நுளம்பு விரட்டிகளைப் பயன்படுத்துமாறும், குழந்தைகளைக் நுளம்புக்கடியிலிருந்து பாதுகாக்க சாத்தியமான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறும் பெற்றோர்களுக்கு தெரிவித்தார்.

கல்வி நிறுவனங்களுக்குள் டெங்கு அபாயம் ஒரு கவலையாக நீடிப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அடுத்த இரண்டு வாரங்கள் குறிப்பாக முக்கியமானதாக இருக்கும் என்றும் பெற்றோர்கள் விழிப்புடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |