தமிழரின் நினைவு கூரும் உரிமையை மறுக்கும் சிறிலங்கா அரசு -சுவிட்ஸர்லாந்து கடும் அதிருப்தி
ஸ்ரீலங்காவின் அரச கட்டமைப்பு தமிழ் மக்களின் நினைவு கூருவதற்கான உரிமையை தொடர்ந்தும் மறுத்து வருகின்றமை தொடர்பில் சுவிட்ஸர்லாந்து தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
கறுப்பு ஜுலை இனவழிப்பு நினைவேந்தலை தடுக்கும் கடும் போக்குவாத அமைப்புக்கு ஆதரவளிக்கும் வகையில் ஸ்ரீலங்கா காவல்துறையினர் செயல்பட்ட சம்பவத்தை மேற்கோள்காட்டி இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதுவர் டொமினிக் ஃபேர்க்லர் (Dominik Furgler) தமது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
தீபங்களை காலால் மிதிக்கும் காவல்துறையினர்

கறுப்பு ஜுலை இன அழிப்பில் கொழும்பில் கொல்லப்பட்டது தமிழ் மக்கள் அல்ல எனவும் அவர்கள் அனைவரும் விடுதலை புலிகள் எனவும் தெரிவித்து நேற்று பொரளையில் நடத்தப்பட்ட அமைதி வழி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை, சிங்கள ராவய அமைப்பினர் தடுக்க முயற்சித்திருந்தனர்.
இவ்வாறு கொல்லப்பட்ட விடுதலை புலிகளை நினைவு கூர அனுமதிக்க முடியாதென சிங்கள ராவய அமைப்பினர் அடாவடியில் ஈடுபட்டிருந்ததுடன், அவர்களது நடவடிக்கைகளுக்கு ஸ்ரீலங்கா இராணுவத்தினர், காவல்துறையினர் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் துணை போகும் வகையில் செயல்பட்டிருந்தமை தமிழ் மக்கள் மத்தியில் ஆத்திரத்துடன் கூடிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.
படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் ஏற்றப்பட்ட தீபங்களை காவல்துறையினர் காலால் மிதிக்கும் காணொளிகள் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
சுவிஸ் தூதுவர் கடும் அதிருப்தி
We commemorate all lives lost during #BlackJuly 40 years ago. The right to peacefully remember is essential to deal with the past & build a harmonious future.
— Dominik Furgler (@SwissAmbLKA) July 24, 2023
Switzerland will continue to support truth, justice & reconciliation for all Sri Lankans. pic.twitter.com/yGnUBRbhde
இந்த நிழற்படத்தை தமது ட்விட்டர் பக்கதில் பகிர்ந்துள்ள இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதுவர் டொமினிக் ஃபேர்க்லர் (Dominik Furgler), ஸ்ரீலங்கா பாதுகாப்பு தரப்பினரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
40 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற கறுப்பு ஜுலை இனவழிப்பின் போது கொல்லப்பட்டவர்களை தாம் நினைவு கூருவதாகவும் அவர் தமது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், கடந்த காலங்களில் இடம்பெற்ற விடயங்களை கையாள்வதற்கும், முரண்பாடற்ற எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் அமைதியான முறையில் நினைவு கூருவதற்கான உரிமை அத்தியாவசியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் உண்மை, நீதி மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு சுவிட்ஸர்லாந்து தொடர்ந்தும் ஆதரவளிக்கும் எனவும் டொமினிக் ஃபேர்க்லர் குறிப்பிட்டுள்ளார்.