தேசபந்துவை அடுத்து இன்று நீதிமன்றில் சரணடைந்த அறுவர்
புதிய இணைப்பு
2023 ஆம் ஆண்டு வெலிகம - பெலேன பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றிற்கு அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக ஆறு சந்தேக நபர்கள் இன்று (21) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) உட்பட எட்டு பேரைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.
பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தவர்
2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கடந்த 4ஆம் திகதி வெலிகம தலைமையக பதில் காவல்துறை பரிசோதகர் உபுல் குமார, நீதிமன்றில் சரணடைந்திருந்தார்.
பின்னர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் நேற்று முன்தினம் (19) நீதிமன்றில் சரணடைந்தார்.
இந்த நிலையில் ஏனைய ஆறு பேரும் இன்று நீதிமன்றில் சரணடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) தும்பர சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெலிகம துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் தேசபந்து தென்னகோனை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் அருண புத்ததாச நேற்று (20) உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் தேசபந்து தென்னகோன் சிறைச்சாலையின் தனி அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
தாக்கல் செய்யப்பட்ட மனு
இதேவேளை குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய தேசபந்து தென்னகோனுக்கு மேலதிகமாக ஏனைய 7 சந்தேநபர்களை கைது செய்ய வேண்டாம் என தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை (ரிட்) மனு விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மனு இன்று (21) மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து தரப்பினர் தொடர்பிலும் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நீதவான் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்