விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ள டீசல் - நாளை முதல் விநியோகம்!
நாட்டு விவசாயிகளுக்கு சீனாவினால் வழங்கப்பட்ட டீசல் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு ஹெக்டேரில் பயிர் செய்யும் விவசாயிகளுக்கு இந்த எரிபொருளை இலவசமாக வழங்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சீனாவின் நன்கொடையில் கிடைத்த 9,000 மெற்றிக் தொன் டீசலே பங்கீட்டு அடிப்படையில் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செயலி மூலம் விநியோகம்

அதற்கமைய சீனாவினால் வழங்கப்பட்ட டீசல் நாளை முதல் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
விவசாய அமைச்சினால் உருவாக்கப்பட்ட புதிய செயலி மூலம் விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
சீன தூதரகம் அறிவிப்பு

சீனாவின் நன்கொடையான ஒரு தொகை டீசலுடன் “சூப்பர் ஈஸ்டன்” என்ற கப்பல் சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு வரவுள்ளதாக சீன தூதரகம் முன்னர் அறிவித்திருந்தது.
அந்த கப்பலில் 9,000 மெற்றிக் தொன் டீசல் இலங்கைக்கு அனுப்பப்படுவதாக சீன தூதரகம் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தது.
இலங்கை விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்காகவே சீனாவினால் டீசல் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.