கடமைகளை பொறுப்பேற்ற வவுனியா மாநகர சபை முதல்வர்
புதிய இணைப்பு
வவுனியா மாநகர சபையின் முதல்வர் மற்றும் பிரதிமுதல்வர் ஆகியோர் இன்று (18) காலை உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றனர்.
வவுனியா மாகநகர சபையின் முதல்வர், பிரதி முதல்வர் தெரிவு அண்மையில் இடம்பெற்றிருந்தது.
அந்தவகையில் முதல்வராக சுந்தரலிங்கம் காண்டீபனும், பிரதி முதல்வராக பரமேஸ்வரன் கார்த்தீபனும் தெரிவுசெய்யப்பட்டிருந்த நிலையில் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றனர்.
குறித்த நிகழ்வில் சமயத்தலைவர்கள் பொதுமக்கள், மாநகரசபை உத்தியோகத்தர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்
மூன்றாம் இணைப்பு
வவுனியா மாநகரசபை முதல்வர் பதவி சுழற்சி முறையில் ரெலோவிற்கு
வவுனியா மாநகரசபையின் முதல்வர் பதவி மூன்று வருடங்களின் பின்னரான காலப்பகுதியில் ரெலோவிற்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் இ. விஜயகுமார் (புரூஸ்) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வவுனியா மாநகரசபையில் தமிழ்க்கட்சிகளிற்கிடையில் ஏற்ப்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி ஆட்சியினை கைப்பற்றியுள்ளது.
அந்தவகையில் கூட்டணியின் பங்காளிக்கட்சியான தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தை சேர்ந்த உறுப்பினருக்கு முதல் மூன்று வருடங்களுக்கு மாநகர முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
மூன்று வருடங்களிற்கு பின்னரான காலப்பகுதியில் சங்கு கூட்டணியின் மற்றொரு பங்காளி கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்திற்கு (ரெலொ) முதல்வர் பதவியை சுழற்சிமுறையில் வழங்கவேண்டும் என்று கூட்டணிக் கட்சிகளிற்கிடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
எனவே குறித்த காலப்பகுதியில் மாநகரசபையின் முதல்வராக ரெலோவை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படுவார்” என்று குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
ஒரு வாக்கால் வவுனியா மாநகர சபையை கைப்பற்றிய சங்கு
வவுனியா (Vavuniya) மாநகர சபையில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியை சேர்ந்த சுந்தரலிங்கம் காண்டீபன் முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் அந்தக் கூட்டைச் சேர்ந்த ஜனநாயக தேசிய கூட்டணி உறுப்பினர் பரமேஸ்வரன் கார்த்தீபன் பிரதிமுதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா மாநகர சபைக்கான முதல்வர், பிரதி முதல்வர் தெரிவு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி தலைமையில், வவுனியா மாநகரசபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.
நடைபெற்ற வாக்களிப்பு
இதன்போது முதல்வர் தெரிவு மற்றும் பிரதி முதல்வர் தெரிவுகள் பகிரங்க வாக்களிப்பின் மூலம் நடத்தப்பட்டது.
அந்தவகையில் சங்கு கூட்டணியின் சார்பாக போட்டியிட்ட சு.காண்டீபனுக்கு ஆதரவாக 11வாக்குகளும், தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்ட சிவசோதி சிவசங்கருக்கு 10 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.
இதனடிப்படையில் சங்கு கூட்டணியைச் சேர்ந்த சு.காண்டீபன் புதிய முதல்வராக தெரிவு செய்யப்பட்டதையடுத்து பிரதி முதல்வருக்கான தெரிவு இடம்பெற்றது.
பிரதி முதல்வராக ஜனநாயக தேசிய கூட்டணி சார்பில் போட்டியிட்ட பரமேஸ்வரன் கார்த்தீபனுக்கு ஆதரவாக 11 வாக்குகளும், சுயேட்சைக் குழுவைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் பிரேமதாஸ் அவர்களுக்கு 10 வாக்குகளும் ஆதரவாக அளிக்கப்பட்டது.
இதனையடுத்து ஜனநாயக தேசிய கூட்டணியின் உறுப்பினர் பரமேஸ்வரன் கார்த்தீபன் பிரதிமுதல்வராக தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
வவுனியாவில் உள்ள நான்கு உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் தமிழ் கட்சிகளுக்கு இடையில் பொது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ள நிலையில் வவுனியா மாநகர சபையில் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணிக்கு (DTNA) மாநகர முதல்வர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று கட்சிகளின் முக்கியஸ்தர்களுக்கு இடையில் தமிழரசுக்கட்சியின் வவுனியா அலுவலகமான தாயகத்தில் நேற்று (15) இடம்பெற்றது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி, ஜக்கிய மக்கள் சக்தியின் கூட்டணி கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜனநாயக தேசிய கூட்டணி ஆகியவற்றின் பிரநிதிகள் கலந்துரையாடலில் பங்குகொண்டிருந்தனர்.
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை
இந்தநிலையில் பொது நோக்கம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு வவுனியாவில் உள்ள நான்கு சபைகளிலும் இணைந்து ஒரு நிர்வாகத்தை உருவாக்குவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் வவுனியா மாநகர சபையில் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணிக்கு மாநகர முதல்வர் பதவியும், பிரதி முதல்வர் பதவி ஜனநாயக தேசியகூட்டணிக்கு முதல் இரண்டு வருடங்களுக்கும், அடுத்த இருவருடங்களுக்கு இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் தவிசாளர் பதவி தமிழரசுக்கட்சிக்கும், உபதவிசாளர் பதவி ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
உபதவிசாளர் பதவியை இரண்டு வருடங்களுக்கு பகிர்வது தொடர்பாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸம் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வவுனியா வடக்கு பிரதேச சபை
வவுனியா வடக்கு பிரதேச சபையில் தமிழரசுக்கட்சிக்கு தவிசாளர் பதவியும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு உபதவிசாளர் பதவியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
வெங்கல செட்டிகுளம் பிரதேச சபையில் ஜக்கிய மக்கள் சக்திக்கு தவிசாளர் பதவியும் தமிழரசுக் கட்சிக்கு உப தவிசாளர் பதவியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், றிசாட் பதியூதீன், முத்துமுகமது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், ஐனநாயக தேசிய கூட்டணி சார்பில் சிறி, ரெலோ கட்சியின் செயலாளர் ப.உதயராசா, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன், ஜனநாயக போராளிகள் கட்சியின் க.துளசி உட்பட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




நல்லூர் கந்தசுவாமி கோவில் 7ஆம் நாள் திருவிழா
