ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் சுதந்திரமாக வெளியே? அச்சத்தில் மக்கள்!!
ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் தொடர்புடையவர்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டு சிறிலங்கா சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த பலர் தற்பொழுது கிழக்கில் சுதந்திரமாக நடமாடித்திரிவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சஹரானின் நெருங்கிய சகாக்கள், சஹரான் குழுவினருக்கு ஆயுதப் பயிற்சி வழங்கியவர்கள் என்று குற்றம்சுமத்தப்பட்டு கைதுசெய்யப்பட்டு சிறைகளில் அடைத்துவைக்கப்பட்டவர்களில் பலர் கிழக்கில் தற்பொழுது சுதந்திரமாக நடமாடிவருவதானது, கிழக்கில் மற்றொரு சதி நடவடிக்கைக்கான திட்டமிடல்கள் ஏதாவது மேற்கொள்ளப்படுகின்றதா என்று சந்தேகம் வெளியிட்டு வருகின்றார்கள் பொதுமக்கள்.
உதாரணத்திற்கு 'ஆமி மொகைதீன்' என்பவர் சஹரானுக்கு நேரடியாக ஆயுதப்பயிற்சி வழங்கிய நபர் என்று ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பாக நடைபெற்ற ஜனாதிபதி ஆணைக்குழுவில் குற்றம் சுமத்தப்பட்டவர்.
இவர் தொடர்பாக நாடாளுமன்றத்திலும் பல தடவைகள் உரைகள் நிகழ்த்தப்பட்டிருந்தன.
இவர் ஊடாகவே மகிந்த தரப்பினர் ஈஸ்டர் குண்டுத்தாக்குதலை திட்டமிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் மணுஹ நாணயக்கார நாடாளுமன்றில் நேரடியாகக் குற்றம் சுமத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. (தமிழ் மொழிபெயர்ப்புடன் கூடிய வீடியோ இணைப்பு)
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பான முதன்மைக்குற்றவாளிகளுள் ஒருவராக கைதுசெய்யப்பட்டு சிறையில் டைக்கப்பட்ட இவர் தற்பொழுது கிழக்கில் சுதந்திரமாக நடமாடிவருவதாக மக்கள் சுட்டிக்காண்பிக்கின்றார்கள்.
இதேபோன்று ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில தடுத்துவைக்கப்பட்டிருந்த பலர் அண்மைக்காலமாக விடுதலை செய்யப்பட்டிருப்பதும், அவர்கள் கிழக்கில் சுதந்திரமாக நடமாடித்திரிவதும், மற்றொரு வன்முறைச் சதி நடவடிக்கை ஒன்றைச் செய்வதற்காகவா என்று அச்சம் வெளியிட்டு வருகின்றார்கள் கிழக்குவாழ் பொதுமக்கள்.