உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் அமெரிக்க திட்டம்! முகம்மது ஃபஸலின் பரபரப்பு குற்றச்சாட்டு
2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு (Easter Sunday) தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பாக சுமார் இரண்டு ஆண்டுகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரான முகம்மது ஃபஸல், சிறப்பு நேர்காணல ஒன்றில் சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இந்தியாவின் வெளிநாட்டு உளவுத்துறை எனக் கூறப்படும் Research and Analysis Wing (RAW) அமைப்பினால் திட்டமிடப்பட்டதல்ல என்றும் மாறாக அது அமெரிக்காவின் ஒரு திட்டமாக இருந்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாகக் கருதப்படும் சஹ்ரான் ஹாஷிம் உடன் தொடர்பு ஏற்படுத்துவதற்காக “அபூஹின்” என்ற போலி நபர் உருவாக்கப்பட்டதாகவும், அந்த நபர் முதலில் சஹ்ரானின் சகோதரர் மூலம் தொடர்பு கொண்டு பின்னர் சஹ்ரானை தாக்குதலுக்குத் தூண்டியதாகவும் ஃபஸல் தெரிவித்துள்ளார்.
சஹ்ரான் தலைமையிலான குழு
மேலும், சஹ்ரான் தலைமையிலான குழுவின் ஆரம்பகட்டத் திட்டம் கிறிஸ்தவ தேவாலயங்களை இலக்காகக் கொண்டதாக இருக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அவர்களின் முதன்மை இலக்கு பொசோன் அல்லது வேறு ஒரு பௌர்ணமி தினத்தில் நடைபெறும் பெளத்த பேரணியைத் தாக்குவதாக இருந்ததாகவும், அதன் மூலம் நாட்டில் பெரும் அமைதியின்மையை உருவாக்குவதே நோக்கமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஏப்ரல் 14 ஆம் திகதி நடைபெற்ற புத்தாண்டு விழாவை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாகவும், ஆனால் அப்போது வெடிபொருட்கள் முழுமையாக தயார் ஆகாத காரணத்தால் அந்தத் திட்டம் மாற்றப்பட்டதாகவும் ஃபஸல் கூறியுள்ளார்.
வெடிபொருட்களை விரைவாக உலர்த்துவதற்காக சஹ்ரானின் குழுவினர் ஒரு துவைப்பொறியையும் (Washing Machine) வாங்கியிருந்ததாகவும், தாக்குதலுக்கு முன்னர் குண்டுகள் கொண்டு செல்லப்பட்ட வாகனத்தில் அந்தத் துவைப்பொறியும் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலின் இறுதி நோக்கம் அக்காலத்தில் ஆட்சியில் இருந்த நல்லாட்சி அரசாங்கத்தை பலவீனப்படுத்தி, பாதுகாப்பு தொடர்பாக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் தலைவரை ஆட்சிக்கு கொண்டு வருவதாக இருந்ததாகவும் ஃபஸல் குற்றஞ்சாட்டினார்.
கோட்டாபய ராஜபக்ச
குறிப்பாக, கோட்டாபய ராஜபக்ச அரசியலுக்கு வருவதற்கான சூழல் இந்தத் தாக்குதலின் மூலம் உருவாக்கப்பட்டதாகவும், அவரது அமெரிக்கக் குடியுரிமையைத் துறந்தமை தொடர்பான ஆவணங்கள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், இந்தத் தாக்குதல் தொடர்பாக தற்போது மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ள 24 பிரதான சந்தேகநபர்களில் பெரும்பாலானோர் நிரபராதிகள் என தாம் நம்புவதாகவும், அவர்களுக்கான சட்டச் செலவுகள் மற்றும் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்காக தனிப்பட்ட முறையில் நிதியுதவி செய்து வருவதாகவும் ஃபஸல் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் சமூகத்தினர் அநீதிக்கு உள்ளாகியுள்ளதாகக் கூறிய ஃபஸல், உண்மையான திட்டமிடுபவர்கள் இன்னும் வெளிச்சத்துக்கு வரவில்லை என்றும், தாம் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆதாரங்களுடன் எந்த இடத்திலும் விளக்கம் அளிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேற்கண்ட தகவல்கள் முகம்மது ஃபஸல் வழங்கிய நேர்காணலில் அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் மற்றும் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டவை. இக்கூற்றுகள் தொடர்பாக நீதிமன்றம் அல்லது அதிகாரப்பூர்வ விசாரணைகளால் உறுதிப்படுத்தப்பட்ட முடிவுகள் அல்ல.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |