சிறைகளை உலுக்கிய ஒரே நேரக் கலவரங்கள்....! உளவுத்துறை எச்சரித்த பாரிய சதி அம்பலம்
நாட்டின் பல சிறைச்சாலைகளில் ஒரே நேரத்தில் வெடித்துள்ள மோதல்கள் மற்றும் அசாதாரண சூழ்நிலைகளுக்குப் பின்னணியில் ஒரு பாரிய ஒருங்கிணைக்கப்பட்ட சதித் திட்டம் உள்ளதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிப்பதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டிலுள்ள ஐந்து சிறைச்சாலைகளில் கலவரங்கள் வெடிக்கக்கூடும் என உளவுத்துறை எச்சரித்து சில நாட்களிலேயே, கொழும்பு நியூ மகசின், குருவிட்ட மற்றும் நீர்கொழும்பு பல்லன்சேன ஆகிய சிறைச்சாலைகளில் ஒரே நேரத்தில் இக்கலவரங்கள் வெடித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 3 கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், பெருமளவிலானோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முக்கிய கைதிகள்
இதனடிப்படையில் கொழும்பு நியூ மகசின் சிறைச்சாலையில் மதிலுக்கு மேலிருந்து வீசப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் பொட்டலத்தைச் சிறை அதிகாரிகள் கைப்பற்றியதைத் தொடர்ந்து இரு கைதி குழுக்களுக்கு இடையே மோதல் தொடங்கியது.
பாதாள உலகக் குழுத் தலைவரான கொஸ்மல்லி என்பவரின் சகாக்கள் உட்பட 40 இற்கும் மேற்பட்ட கைதிகள் சிறைக் கதவை உடைத்துக் கொண்டு வெளியே வந்து, அதிகாரிகளை அச்சுறுத்தி வெளிவாயில் வழியாகத் தப்பியோட முயன்றனர்.

ஏற்பட்ட கடுமையான கலவரத்தில் ஹோமாகம ஹந்தயா என்பவரின் கூலிப்படைத் துப்பாக்கிதாரியான ஹோமாகம - கட்டுவனப் பகுதியைச் சேர்ந்த 35 வயதான முகமது அஸ்மான் ஷெரிப்டீன் என்ற கைதி உயிரிழந்தார்.
இச்சம்பவத்தில் காயமடைந்த 10 கைதிகள் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், கலவரத்திற்குத் தலைமை தாங்கிய முக்கிய கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
போதிய வசதிகள்
அதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து குருவிட்ட சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட 1,000 இற்கும் மேற்பட்ட கைதிகளுக்குப் போதிய வசதிகள் இல்லை எனக் கூறித் தொடங்கப்பட்ட ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியது.
ஆத்திரமடைந்த கைதிகள் சிறைச்சாலை வைத்தியசாலை மற்றும் கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தி சேதத்தை ஏற்படுத்திய நிலையில், நிலமையைக் கட்டுப்படுத்த அதிகாரிகளும் காவல்துறையினரும் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் காயமடைந்த 15 கைதிகளில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
மேலும், நீர்கொழும்பு பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் காலை உணவு வழங்குவதற்காகக் கைதிகள் வெளியில் அழைத்துவரப்பட்ட போது, போதைப்பொருள் தகராறு காரணமாக மோதல் வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கண்ணீர்ப்புகைப் பிரயோகம்
கைதிகள் கூரை மீதேறிப் போராட்டம் நடத்தியதுடன் பிரதான வாயில் அருகே வன்முறையில் ஈடுபட்ட நிலையில், காவல்துறையினர், விசேட அதிரடிப்படை (STF), கலகக் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் விமானப்படை இணைந்து கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டு நிலமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் 31 பேரும், மஹர சிறைச்சாலை மோதலில் 2 கைதிகள் உயிரிழந்தும் 21 பேர் காயமடைந்தும் இருந்தனர். தற்போது நிலவும் அசாதாரண நிலமையைக் கருத்திற் கொண்டு காவல்துறை மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவின் தலைமையில் நாடு முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜனாபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற உயர் மட்டக் கூட்டத்தில், காவல்துறையினர், விசேட அதிரடிப்படை மற்றும் முப்படை இணைந்த கூட்டுப் பாதுகாப்பு வேலைத்திட்டத்தை (Joint Security Mechanism) எதிர்வரும் வாரத்தில் நடைமுறைப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |