ஷானி அபேசேகர பிரதி காவல்துறை மா அதிபராக பதவி உயர்வு
நிருவாக மேன்முறையீட்டு நியாய சபை (AAT) கடந்த மே மாதம் பிறப்பித்த உத்தரவுக்கு அமைவாக, சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளர் (SSP) ஷானி அபேசேகர, பிரதி காவல்துறை மா அதிபர் (DIG) பதவிக்கு அதிகாரப்பூர்வமாகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
சபையின் உத்தரவின்படி, குறித்த பதவி உயர்வானது 2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 25 ஆம் திகதி முதல் பின்னோக்கிச் செல்லும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன்னர் ஷானி அபேசேகரவினால் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு தொடர்பான விசாரணைகளை நிறைவு செய்த பின்னரே, அவருக்கு இந்தப் பதவி உயர்வை வழங்குமாறு தேசிய காவல்துறை ஆணைக்குழுவிற்கு மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
CID பணிப்பாளர் பதவி
நியாய சபையின் கட்டளைக்கு அமைய, காவல்துறை மா அதிபர் இன்றையதினம்(07) வெள்ளிக்கிழமை இது தொடர்பான அதிகாரப்பூர்வ காவல்துறை அறிவித்தலை வெளியிட்டு, அவரது பிரதி காவல்துறை மா அதிபர் பதவியை உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தப் பதவி உயர்வு காரணமாக, அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் பதவியிலிருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
1986 ஆம் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் திகதி உதவி காவல்துறை பரிசோதகராக இலங்கை காவல்துறை சேவையில் இணைந்த ஷானி அபேசேகர, தனது பணிக்காலத்தில் காவல்துறை பரிசோதகர், தலைமை காவல்துறை பரிசோதகர், உதவி காவல்துறை கண்காணிப்பாளர் (ASP), காவல்துறை கண்காணிப்பாளர் (SP) மற்றும் சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளர் (SSP) உள்ளிட்ட பல நிலைகளில் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |