கிழக்கில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 150 பேர் பாதிப்பு - நான்கு மரணங்கள் பதிவு
கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 150 தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ள நிலையில், நான்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.
திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணியகத்தில் நேற்று (15) ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாணத்தில் 24 மணித்தியாலத்திற்குள் 150 கொவிட் -19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், நான்கு மரணங்களும் பதிவாகியுள்ளன.
இது கடந்த சில தினங்களோடு ஒப்பிடும்போது சற்று குறைவான எண்ணிக்கையாக காணப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
திருகோணமலை மாவட்டத்தில் இரண்டு மரணங்களும் ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 64 கொவிட் தொற்றாளர்களும் அம்பாறை சுகாதார சேவைகள் பணியகத்தில் 18 பேரும், கல்முனைப் பிராந்தியத்தில் 23 பேரும், இரண்டு மரணங்களும் சம்பவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை கடந்த 24 மணித்தியாலத்திற்குள் நான்கு மரணங்களும், கடந்த 7 நாட்களில் 39 மரணங்களும் ஏற்பட்டுள்ளது. மொத்தமாக மூன்றாவது அலையில் கிழக்கு மாகாணத்தில் 200 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.