சுவிஸில் ஈழத்தமிழர்களின் ஆலயங்கள் : சட்டபூர்வமாக பதிவு செய்வதற்கான அவசியம்
ஈழத்தமிழர்களின் ஆலயங்கள் பல சுவிஸ் (Switzerland) நாட்டில் (verein) பேரயன் என்கின்ற அமைப்பாகவே ஆரம்பகாலத்தில் உருவாக்கப்பட்டது .
இருப்பினும், இந்த ( verein recht ) பேரயனுக்கான உரிமைகளை அங்கத்தவர்கள் பெறத்தக்க வகையில் சுவிஸ் சிவில் சட்டப் பிரிவு இலக்கம் 60 -79 வரையான பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட சட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு அமைக்கப்படாமல் இருந்தது.
இதனால், ஆலயங்களுள் உள்ளக சனநாயகமோ , வெளியக சனநாயகமோ இன்றி கட்டப்பஞ்சாயத்து முறையில் சில ஆலயங்கள் பரிபாலிக்கப்பட்டு வந்தன.
இதனால், பாதிக்கப்பட்ட சில ஆலய தரப்புக்கள் இது தொடர்பாக சுவிஸ் நீதிமன்றங்களை நாடிய நிலையில், இதனை ஆராய்ந்த நீதிமன்றம் சில ஆலயங்களில் நிர்வாக செயற்பாடுகள் சுவிஸ் சட்டத்திற்கு புறப்பாக இருந்தால் இடைக்கால தடை உத்தரவுகளையும் பெருந்தொகையான ஆலய நிதிக் கையிருப்புக்களையும் முடக்கின.
சில ஆலயங்களில் 4/5 வருடங்கள் கடந்த பின்பும் மேற்படி நிதி இன்னும் முடக்க நிலையிலேயே உள்ளது .
இந்த ஆலய நிதியின் உரிமையாளர்கள் ஆலய அடியவர்கள், ஆலய அடியவர்கள் குளிரும் வெயிலிலும் கஷ்டப்பட்டு உழைத்து ஆலய வளர்ச்சிக்காக வழங்கிய பணம், ஆலய நிர்வாகங்களின் அசமத்தமான நிர்வாக நடவடிக்கைகளால் முடக்கப்பட்டுள்ளன.
இதனால், வருத்தம் அடைபவர்கள் பொதுமக்கள் எனவே இந்த பட்டறிவுகள் அனுபங்களின் அடிப்படையில் பல ஆலயங்கள் விழித்துக்கொண்டு தமது ஆலயங்களை சட்ட பூர்வ அமைப்பாக சுவிஸ் சட்ட வரைபுக்கு அமைய பதிவு செய்து உண்மைத் தன்மையோடும் மற்றும் வெளிப்படைத்தன்மையோடும் நடாத்தியும் வருகின்றார்கள்.
ஆலயத்தின் நிதி அதிகரிக்கும் போதும் சொத்துகள் அதிகரிக்கும் போதும் பிணக்குகள் ஏற்பட வாய்ப்புகள் உருவாகலாம்.
எனவே வெள்ளம் வருமுன் அணை கட்டவேண்டும் என்பதற்கு ஏற்ப சட்ட பூர்வமாக பதிவு செய்யப்படாத ஆலயங்கள், பதிவு செய்யப்பட்டு இந்து அடியவர்களிலுக்கு உரித்தான ஆலய சொத்துக்கள் நிதி என்பவற்றுக்கான பொதுப் பாதுகாப்பு உரிமையை ஆலயத்தின் வளர்ச்சியில் பற்றுடையோர் என்பவர்கள் செய்திட வேண்டும்.
ஒவ்வொரு அமைப்புக்கும் சட்ட உரிமையும் சட்டப் பாதுகாப்பும் அவசியமானது என்பதனை யாரும் மறுக்க மாட்டீர்கள்.
ஆலயங்களின் சில நிர்வாகிகள் கருதுகிறார்கள், ஆலய பொதுச்சபைக் கூட்டங்களின் தீர்மானங்கள் சுவிஸ் சட்டவாக்கத்தை கட்டுப்படுத்தும் என கருதுகின்றார்கள்.
இது தவறான முன்னுதாரணம், சுவிஸ் நாட்டின் அமைப்புக்களின் சட்ட சரத்துக்கு உட்பட்டே ஆலய யாப்புக்கள் கூட தயாரிக்கப்பட வேண்டும் என்பதுவும் , பொதுச்சபை , நிர்வாக சபைத் தீர்மானங்களும் அதற்க்கு உட்பட்டே உருவாக்கப்பட வேண்டும் என்பதுவும் அவசியமான ஒன்றாகும்.
அதனை மீறிச் செய்வது சட்டமீறல் ஆகும் அவ்வாறு சட்ட மீறலுக்கு உட்படுவது தண்டனைச் சட்டக்கோவைக்கு அமைய குற்றமாக கருதி குற்றமாக பதிவு செய்யவும் சந்தர்பங்கள் உண்டு.
1990 களில் ஈழத்தமிழ் மக்களால் ஆரம்பிக்கப்பட்ட ஆலயங்கள் 30/ 35 வருட வரலாற்றைக் கொண்ட போதும் , அந்த வரலாற்றையும் புலம்பெயர் ஈழத்தமிழர் வரலாற்றையும் பேணும் விதத்தில் இந்த ஆலயங்களின் ஆவணங்கள் சட்டபூர்வமாக பாதுகாக்கபட வேண்டும்.
நீண்ட நெடிய காலத்தின் பின் சுவிஸ் ஈழத்தமிழர்களின் -வரலாறு பற்றி அடுத்த தலைமுறை மீளாய்வு செய்கின்ற போது , தமது மூத்தோர் இந்த நாட்டில் சட்டவாட்சிக்கு உட்பட்டு அமைப்புக்களை அமைத்து நடாத்தி வந்திருக்கிறார்கள் என நினைத்து பெருமிதம் கொள்வார்கள்.
இத்தகைய ஒரு பின்னணியிலும் ஆலயங்கள் சுவிஸ் சட்டத்திற்கமைய பதிவு செய்யப்பட வேண்டும்.
இப்படி பதிவு செய்வதால் குறிப்பாக Handelsregisteramt என்னும் திணைக்களத்தில் பதிவு செய்வது அவசியமானது.
குறிப்பாக ஆலய பொதுச்சபை தவிர்ந்த நிர்வாக சபையில் வேறு மாகணங்களில் வாழும் , குறித்த ஆலயத்தை பூர்வீக வழிபாட்டாளர்களாக உள்ளவர்களும் பதிவு செய்வது சட்டப் பாதுகாப்பை தரக்கூடியது.
பதிவு செய்யும் போது ஆலயத்திற்கான யாப்பு ( Statuten) மாதிரிகள் , பொதுச்சபைக் கூட்ட அறிக்கை ( Generalversammlung) என்பன எப்படி உருவாக்கப்பட வேண்டும் என்ற விடயங்களை கூட சுவிஸ் மாகண அரசுகள் தமது இணையத்தளங்களில் பிரசுரித்துள்ளன.
இவற்றை நாமும் பின்பற்ற வேண்டும், பதிவு செய்யப்பட்ட ஆலயமாக இருந்தால் ஆலயத்திற்க்கு , பூசை , உற்சவங்கள் , நேர்த்தி மற்றும் நன்கொடை என அடியவர்கள் நிதி வழங்கினால் அந்த நிதிக்குரிய வரியைக் கூட சுவிஸ் நாட்டில் வாழும் வரி செலுத்தும் இந்து அடியவர்களுக்கு ,வரிவிலக்கு கூட அளிக்கப்படுகிறது.
இதனால் வரி செலுத்தும் எமது அடியவர்கள் தமது வரிப்பணத்தில் ஒரு தொகையை செலுத்த வேண்டியதில்லை இத்தகைய வசதிகளைக் கூட மானில அரசுகள், மக்களுக்காக செய்திருக்கின்றன.
ஆலயங்கள் வருட இறுதியில் அடியவர்கள் வரி விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்காக முனையும் போது , ஆலயங்கள் அடியவர்களால் வழங்கப்பட்ட நன் கொடைப் பட்டியலை அடியவர்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
இதனால் அடியவர்களும் நலன் பெறுகிறார்கள், ஆலய நிதி நிலமையும் வளர்ச்சி பெறுகிறது அத்தோடு கையாடல் , முறையற்ற நிதி பரிபாலனங்களும் இல்லாமல் போகிறது.
எனவே, இதற்காக ஆலயங்கள் பதிவு செய்யப்படவேண்டும் ஆலயம் பதிவு செய்யும் போது ஆலயத்திற்கான யாப்பு ஒன்று எழுதப்படவேண்டும் .
பொதுச்சபை உறுப்பினர்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய விதத்தில் சுவிஸ் சட்டத்திற்க்கு அமைய , சுவிஸ் நிறுவனச்சட்டங்களில் நிபுணத்துவம் உடைய ஒரு சட்டத்தரணி மூலமாக அந்த யாப்புகள் உருவாக்கப்பட வேண்டும்இ
இத்தகைய, கருமங்களை செய்து அதனை சீர்படுத்தி அடுத்த தலைமுறையிடம் கொடுக்க வேண்டிய தார்மீக பொறுப்பு ஒவ்வொரு ஆலய பொதுச்சபை உறுப்பினருக்கும் உண்டு.
இந்த விடயங்களை பொதுமக்களின் நலன் சார்ந்து , ஆலய பொதுச்சபைக் கூட்டங்களில் வலியுறுத்தி செய்யவேண்டிய சமூகப் பொறுப்பு அனைவருக்கும் உண்டு.
இதன் மூலம் தவறுகள் , சீர்கேடுகள் , முறைகேடுகள் எதிர்காலங்களில் ஆலய நிர்வாகங்களில் இல்லாமல் தவிர்க்கப்படும்.
ஒரு இனத்தின் தேசிய அடையாளம் என்பது அந்த இனத்தின்மொழி , பண்பாடு , கலாசாரம் ,வரலாறு கலை ஆகியவற்றின் பாதுகாப்பிலேயே தங்கியுள்ளது.
எனவே, ஆலயங்களை சரிவர நிர்வகிப்பதன் மூலம் தமிழ்த்தேசிய அடையாளமும் பேணப்படும்.
இதன் மூலம் சுவிஸ் நாட்டிலும் தமிழ்ச் சந்ததியின் மொழி , பண்பாடு , கலை மற்றும் வரலாறுகள் பாதுகாக்கப்படும்.
ஒரு இனத்தின் மொழி , பண்பாடு , கலை மற்றும் வரலாறுகள் பாதுகாக்கும் பேணும் இடமாக ஆலயங்களே விளங்குகின்றன.
எனவே, ஆலயங்களை சட்டபூர்வ அமைப்பாக பிரகடனப்படுத்தி பாதுகாப்பதன் மூலமே , எமது தேசவிடுதலைக்காக வித்தாகிய விடுதலை மறவர்களின் கனவுகளும் பேணப்பட்டு நனவாக்க ஆலயங்களின் உறுதித்தன்மை அவசியம்.
ஒரு நாட்டில் வாழும் போது அந்தநாட்டின் சட்டம் தெரியாது என நாம் சட்டமீறல் செய்ய முடியாது அவ்வாறு செய்வது கூட குற்றமே, இதனை உணர்ந்தவர்களே மக்கள் நலன் கருதி அனைவரும் பாடுபட வேண்டும்.
ஆக்கம் - மோகன் பரன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 5 நாட்கள் முன்
