நல்லூர் பிரதேச சபைக்கு எழுந்த எதிர்ப்பு: அரியாலை பகுதியில் 8 பேர் அதிரடி கைது
யாழ் (Jaffna) அரியாலை பகுதியில் கழிவுகளை கொட்ட வந்தவர்களை மறித்து அடாவடியில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை யாழ்ப்பாண காவல்துறையினரால் இன்று (09) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அரியாலை பகுதியில் நல்லூர் பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுகளை தரம் பிரிக்கும் நிலையம் அமைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரியாலை மக்கள் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
பிரதேச சபை
குறித்த போராட்டம் நேற்றைய தினம் (08) முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், இன்றைய தினம் (09) நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான வாகனத்தில் குறித்த இடத்திற்கு கழிவுகளை கொண்டு வந்த சமயம் அப்பகுதியில் மக்கள் கூடி வாகனத்தை மறித்து எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.
மக்கள் அனுமதி
இது தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
இதையடுத்து, அங்கிருந்தவர்களோடு பேச்சுக்களை நடத்தி, இந்த முறை வாகனத்தை அனுமதிக்குமாறு கோரியதை அடுத்து வாகனத்தை செல்ல மக்கள் அனுமதித்துள்ளனர்.
தனியார் தங்குமிடம்
இந்தநிலையில் , யாழில் உள்ள பிரபல தனியார் தங்குமிடத்தினர் அப்பகுதியில் உள்ள தமது காணி ஒன்றில் கழிவுகளை கொண்ட வந்த போது அவர்களின் வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, அடாவடியில் ஈடுபட்டு பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரியாலை பகுதியை குப்பை மேடாக்கும் முயற்சியை தடுக்க போராடியவர்களை காவல்துறையினர் பொய் குற்றம் சாட்டி கைது செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
