வாகன இறக்குமதிக்கு அனுமதி..! மேலும் சில விசேட வேலைத்திட்டங்களுக்கும் அங்கீகாரம் - வெளியான அறிவிப்பு
நாட்டிற்கு அந்நிய செலாவணியை கொண்டு வரும் வகையில் முன்மொழியப்பட்ட சில வேலைத்திட்டங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மின்சார வாகன இறக்குமதி
இதன்படி, அந்நிய செலாவணியை கொண்டு வரும் நபர்களுக்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் விசேட வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் சந்திப்பில் கலந்து கொண்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இதனைத் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் நாட்டுக்கு சட்டப்பூர்வமாக அனுப்பும் பணத்தில் 50 வீதத்திற்கு சமமான பெறுமதியான மின்சார வாகனத்தை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரத்தை அறிமுகப்படுத்துவதற்கான முன்மொழிவுக்கே இவ்வாறு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வெளிநாட்டவர்களுக்கான எரிபொருள் உரிமம்
விமான நிலையத்தில் அமெரிக்க டொலர்களை செலுத்தும் சுற்றுலாப் பயணிகள், வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்கள் மற்றும் இரட்டை குடியுரிமை பெற்றவர்களுக்கு எரிபொருள் அனுமதிப்பத்திரம் ஒன்றை வழங்க எரிசக்தி அமைச்சர் இணங்கியுள்ளார்.
வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, அமைச்சரவையில் முன்வைத்த யோசனைக்கு எரிசக்தி அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
