தேசியவாழ்க்கையில் இருந்து தமிழரை இல்லாதொழிக்க முயற்சி: சுமந்திரன் குற்றச்சாட்டு!
அரசியலமைப்பு பேரவை என்பது ஒரு முக்கியமான அமைப்பு. அதில் வடகிழக்கு தமிழ்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர் கூட இல்லாமல் இருப்பது தேசிய வாழ்க்கையில் இருந்து எம்மை அப்புறப்படுத்தும் செயற்பாடு என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.
வவுனியாவிற்கு இன்று விஜயம் செய்த அவர் தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்டக்கிளை உறுப்பினர்களிடம் பிரசாரபணியினை முன்னெடுத்திருந்தார். அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
அரசியலமைப்பு பேரவையில் சித்தார்த்தனின் பெயரினை
அரசியலமைப்பு பேரவையில் சித்தார்த்தனின் பெயரினை நாம் முன்மொழிந்தோம். எதிர்க்கட்சிகளில் இரண்டாவது பெரிய கட்சியாக நாடாளுமன்றில் நாம் இருக்கின்றோம். ஆகவே அவருக்கு அந்த இடம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். துரதிஸ்டவசமாக அரசபக்கத்தில் இருந்து பலர் எதிர்க்கட்சி உறுப்பினர்களாக அமர்ந்துள்ளனர்.அவர்களது எண்ணிக்கை எங்களது எண்ணிக்கையினை விட கூடுதலாகவுள்ளது. இதனால் அந்த விடயம் முடிவில்லாமல் நிறைவடைந்திருக்கின்றது.

சபாநாயகர் இது தொடர்பாக தெளிவான ஒரு முடிவினை எடுக்காமல் இருக்கிறார். எம்மோடு பேசும் போது அந்த பிரதிநிதித்துவம் உங்களுக்குத்தான் என்று சொல்கிறார்.
ஆனால் அந்த உத்தரவை அவர் செய்ய மறுக்கின்றார். எதிர்க்கட்சித்தலைவரும் எமது நிலைப்பாட்டோடு இணங்கியிருக்கின்றார். மொட்டுக்கட்சியின் பொதுச் செயலாளரும் அதற்கு இணங்கியிருக்கின்றார்.
நாடாளுமன்றிலே ஒரு தீர்மானமாக
இதனை நாடாளுமன்றிலே ஒரு தீர்மானமாக கூட நிறைவேற்றி செயற்படுத்தலாம். இதுபோலவே முதலாவது குடியரசு அரசியல் யாப்பு உருவாக்கப்படும் போது பேரினவாத நோக்குடன் எவ்வாறு எம்மை தேசிய வாழ்க்கையில் இருந்து புறக்கணித்தார்களோ அவ்வாறான ஒருநிலைமை மீண்டும் நடைபெறும் அறிகுறியாகவே நான் இதனை காண்கின்றேன்.

அரசியலமைப்பு பேரவை என்பது ஒரு முக்கியமான அமைப்பு அதிலே வடகிழக்கு தமிழ்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர் கூட இல்லாமல் இருப்பது தேசிய வாழ்க்கையில் இருந்து எம்மை அப்புறப்படுத்தும் ஒரு செயற்பாடு என்பதை நாம்சொல்லியிருக்கின்றோம்.
ரணிலின் பொருத்தமற்ற செயற்பாடு
எனவே பிரிதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படவேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். நாடாளுமன்றக்கூட்டத்தொடரை முடிவிற்கு கொண்டுவரவேண்டிய தேவை இல்லை. அது ஒரு விசேடசந்தர்ப்பத்தில் தான் இடம்பெறவேண்டும். அதற்கான பாரம்பரியங்கள் இருக்கின்றன.ஆகையினால் தவறான நோக்கங்களுக்காக அது நிறுத்தப்படுமானால் அது பிழையானவிடயம்.

சில குழுக்களின் தலைவர்களை மாற்றுவதற்காக அதிபர் முன்னரும் ஒரு சந்தர்ப்பத்தில் இவ்வாறு செய்திருந்தார். அதனையே மீண்டும் செய்ய எத்தனிக்கின்றார் என்பதே குற்றச்சாட்டு. அது முற்றிலும் பொருத்தமற்ற ஒரு செயற்பாடு. அதனை நாம் எதிர்ப்போம். என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |