அமெரிக்கத் தளங்கள் மீதான ஈரானின் தாக்குதல்: முறியடித்து அதிரடி பதிலளித்த கட்டார்
கட்டாரில் (Qatar) உள்ள அல்-உதெய்த் விமானத் தளத்தை (Al Udeid Air Base) குறிவைத்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலை அதன் வான் பாதுகாப்புப் படைகள் வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் (Ministry of Defense) தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் தாக்குதலில் எந்த உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அணுசக்தி நிலையங்கள்
அமெரிக்கா தனது அணுசக்தி நிலையங்களைத் தாக்கியதற்கு பதிலடியாக, கத்தாரில் உள்ள அல்-உதெய்த் விமானத் தளத்தின் மீது ஈரான், சக்திவாய்ந்த மற்றும் அழிவுகரமான ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளதாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குறித்த அறிக்கையில், சர்வவல்லமையுள்ள கடவுளையும், ஈரானின் விசுவாசமுள்ள பெருமைமிக்க மக்களையும் நம்பி ஈரான் இஸ்லாமிய குடியரசு, அதன் பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை அல்லது தேசிய பாதுகாப்புக்கு எதிரான எந்தவொரு ஆக்கிரமிப்பையும் ஒருபோதும் பதிலளிக்காமல் விடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானப்படை
இந்தநிலையில், அமெரிக்காவின் அல் உதெய்த் விமானப்படை தளத்தை ஈரான் தாக்கியதற்கு கத்தார் கண்டனம் தெரிவித்துள்ளது. இது கத்தாரின் இறையாண்மை மற்றும் வான்வெளியை அப்பட்டமாக மீறுவதாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த வெளிப்படையான ஆக்கிரமிப்பின் தன்மை மற்றும் அளவிற்கு ஏற்பவும், சர்வதேச சட்டத்தின் படியும் நேரடியாக பதிலளிக்கும் உரிமை கத்தார் அரசுக்கு உள்ளது என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சு
குறித்த விடயத்தை கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மஜீத் அல்-அன்சாரி தெரிவித்துள்ளார்.
கத்தார் வான் பாதுகாப்பு படையினர் தாக்குதலை முறியடித்து ஈரானிய ஏவுகணைகளை வெற்றிகரமாக இடைமறித்தனர் என்பது எங்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தாக்குதலின் சூழ்நிலைகளை தெளிவுபடுத்தும் அறிக்கை பின்னர் பாதுகாப்பு அமைச்சகத்தால் வெளியிடப்படும் எனவும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
