இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை
மத்திய கிழக்கில் நிலவும் மோதல் காரணமாக, இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தில் பணிபுரியும் இலங்கையர்கள் தமது பாதுகாப்பு குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா அமைப்பினால் நடத்தப்படும் ஏவுகணைத் தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அவதானிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
ஹைஃபா, நஹாரியா, எக்கர், கலிலி, அஃபுலா, கர்மேல் மலைத்தொடர், நாசரேத், திபேரியா உள்ளிட்ட வடக்கு பிராந்தியங்களில் வசிக்கும் மக்கள், லெபனான் திசையிலிருந்து வரக்கூடிய தாக்குதல்கள் மற்றும் நாட்டின் உட்பகுதிகளில் சில குழுக்களால் முன்னெடுக்கப்படக்கூடிய ஆத்திரமூட்டும் சம்பவங்கள் குறித்தும் அவதானம் செலுத்த வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானில் இருந்து முன்னெடுக்கப்படும் தாக்குதல்கள்
எனினும், தற்போது ஈரானில் இருந்து முன்னெடுக்கப்படும் தாக்குதல்களில் குறைவு காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
வடக்கு இஸ்ரேல் பிராந்தியத்தில் 9,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் பணிபுரிந்து வருவதால், அந்நாட்டு பாதுகாப்புப் படைகள், அரச ஊடகங்கள், PIBA நிறுவனம் மற்றும் தூதரகம் வழங்கும் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஏதேனும் தாக்குதலின் போது இஸ்ரேலிய எம்புலன்ஸ் சேவைகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், நீங்கள் இருக்கும் இடத்தை குறிப்பிட்டு 101 என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் அச்சேவையைப் பெற்றுக்கொள்ளலாம் என இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.
தேவையான மேலதிக அறிவுறுத்தல்களுக்கு தூதரகத்தின் WhatsApp இலக்கமான 00972-559305731 ஊடாக வாரத்தின் 7 நாட்களும் தொடர்புகொள்ள முடியும்” என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |