இங்கிலாந்தில் பெண்ணின் அவசர அழைப்பு - விரைந்து வந்த பொலிஸாருக்கு ஏற்பட்ட ஏமாற்றம்
இங்கிலாந்தில் சேற்று மண்ணில் புதைந்த நிலையில் மனித கால் விரல் இருப்பதாகத் தெரிவித்து பெண்யொருவர் பொலிசாருக்கு தகவல் அளித்த நிலையில் பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு நடத்தியதில் அங்கு இருந்த பொருளைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இங்கிலாந்தின் கேட்ஷீட் நகரம் வின்லெடன் பகுதியை சேர்ந்த பெண் தனது செல்லப்பிராணியான நாயுடன் கடந்த வியாழக்கிழமை தனது குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள வயல்வெளி பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது மனிதனின் காலின் பெருவிரல் ஒன்று சேறு நிறைந்த மண்ணில் புதைந்தவாறு இருப்பதை கண்டு அந்த பெண் அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக தனது கைபேசியில் அந்த கால் விரலை புகைப்படம் எடுத்த அந்த பெண் தனது வீட்டிற்கு வேகமாக வந்து அந்த புகைப்படத்தை பொலிசாருக்கு அனுப்பி குறித்த விபரத்தை கூறினார்.
இதனால், அதிர்ச்சியடைந்த பொலிசார் யாரேனும் ஒருவரை கொன்று சேற்று மண்ணில் யாரேனும் புதைத்துவிட்டு சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தால் அந்த பெண் கூறிய இடத்திற்கு விரைந்து சென்றனர். பல பொலிஸ் அதிகாரிகள், மோப்பநாய்கள் உதவியுடன் அந்த பெண் கூறிய இடத்திற்கு விரைந்து சென்று மணிக்கணக்கில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இரவு நேரத்திலும் இந்த தேடுதல் வேட்டை நடைபெற்றது. சேறு நிறைந்த இடம் என்பதால் தேடுதல் பணியில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், பல மணி நேர தேடுதலுக்கு பின்னர் மனிதனின் கால் பெருவிரல் புதைந்த நிலையில் இருந்த இடத்தை பொலிசார் கண்டுபிடித்தனர். ஒரு நபரை யாரோ கொன்று இங்கு புதைத்திருக்கலாம் என பொலிசார் சந்தேகமடைந்தனர். இதனால், அந்த கால் பெருவிரலை சேற்றில் இருந்து எடுத்தனர்.
அப்போது பொலிசாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. சேற்றில் புதைந்திருந்தது மனிதனின் கால் விரல் அல்ல... அது உருளைக்கிழங்கு.அந்த உருளைக்கிழங்கின் மேற்பரப்பை சுற்றி காளான் முளைத்துள்ளது. இதனால் அந்த உருளைக்கிழங்கு தத்ரூபமாக மனிதனின் கால் பெரு விரல் போன்று தோற்றமளித்துள்ளது. இதை உணர்ந்த பொலிசார் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர்.
பல மணி நேர தேடுதல் வேட்டை வீணாகியும், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சேற்று மண்ணில் மனிதனின் கால் விரல் போன்று தோற்றத்தில் புதைந்திருந்ததால் அந்த பெண் பொலிசுக்கு தகவல் கொடுத்துள்ளார். அவரின் விழிப்புணர்வு பாராட்டிற்கு உரியது என இங்கிலாந்து பொலிசார் தெரித்துள்ளனர்.
மனிதனின் கால் விரல் போன்று தோற்றமளித்துள்ள அந்த உருளைக்கிழங்கு புகைப்படம் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.