டக்ளஸ் தரப்புக்கு அதிர்ச்சி கொடுத்த மின்சார சபை
மின் கட்டணம் செலுத்தப்படாமையினால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் சிறிதர் தியட்டர் கட்டிடத்தில் இயங்கி வருகின்ற ஈ.பி.டி.பி. தலைமை அலுவலகம் இருளில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக தகவல்களை வெளியிட்ட பெயர் குறிப்பிட விரும்பாத இலங்கை மின்சார சபை ஊழியர் ஒருவர், 2014 ஆண்டுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான கட்டணம் செலுத்தப்படாமல் நிலுவையில் இருந்த நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
மின்சார சபையின் நிலைப்பாடு
மேலும், அரசாங்கத்தில் மிக முக்கியமான சிரேஷ்ட அமைச்சராகவும், தற்போதைய அரசாங்கத்தினை அமைப்பதில் முக்கிய பங்காற்றியவருமாக விளங்கி வருகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது அதிகாரம், அரசியல் செல்வாக்கு ஆகியவற்றை இதுவரை பயன்படுத்தாது இருப்பது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக குறித்த மின்சார சபை ஊழியர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் சுன்னாகத்தில் இயங்கும் தேசியக் கட்சியைச் சேர்ந்த எம்.பி ஒருவருக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தின் மின் இணைப்பை மின்சார சபை ஊழியர்கள் துண்டித்த போது, தமது அரசியல் செல்வாக்கை பயன்படுத்திய குறித்த பிரமுகர், ஒரு மணி நேர இடைவெளியில் மின் இணைப்பை மீண்டும் பெற்றுக்கொண்டமை, தொடர்பில் பத்திரிகைகளில் கூட செய்திகள் வெளியாகியிருந்தன.
இவ்வாறான நிலையில் தற்பொழுது செல்வாக்கு மிகுந்த நபராகவுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் யாழ். அலுவலக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக ஈ.பி.டி.பி வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் தெரியவருவதாவது,
ஈ.பி.டி.பியின் நிலைப்பாடு
1990 இல் இருந்து 1995 ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணம் இராணுவத்தினரால் விடுவிக்கும் வரை சிறிதர் அரங்கு விடுதலைப் புலிகள் திரையரங்காக செயற்பட்டிருந்ததுடன் விடுதலைப் புலிகளின் பாவனையில் இருந்துள்ளது.
பின்னர் படையினரின் பாவனையில் இருந்த நிலையிலேயே ஈபிடிபியினரினால் பொறுபேற்கப்பட்டு அலுவலகம் அமைக்கப்பட்டது.
அப்போதைய யுத்த சூழ்நிலை காரணமாக பாதுகாப்பின் நிமிர்த்தம் சுற்றிவர மின்சாரம் வழங்கப்பட்டு நாகவிகாரை உட்பட அயலில் உள்ளவர்களுக்கும் இங்கிருந்தே மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
யுத்தத்திற்கு பின்னர் மின்சாரப் பாவனை மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலும், மின்மாணி வாசிப்பு அதிகமாக இருப்பது அவதானிக்கப்பட்ட நிலையில், 2014 ஆண்டு புதிய மின் மாணி பொருத்தப்பட்டிருக்கிறது.
அதன் பின்னர் மின் கட்டணம் சீராக செலுத்தப்பட்டு வருகின்ற போதிலும், 2014 ஆம் ஆண்டிற்கு முற்பட்ட நிலைவைத் தொகை மற்றும் அதற்கான அபராதத் தொகை போன்றவையே தற்போது மின் துண்டிக்கப்பட்டமைக்கு காரணம் என்றும் தெரிய வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
