டொலரை பெற்றுக்கொள்வதற்கு புதிய திட்டத்தை கையாண்டுள்ள மதுவரித் திணைக்களம்!
இலங்கையின் உள்ளூரில் தயாரிக்கப்படும் மதுபான வகைகளின் ஏற்றுமதியினை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.ஜே. குணசிறி தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த வருடம் உள்ளூர் மதுபான ஏற்றுமதி மூலம் 2 கோடியே 50 லட்சம் டொலர்கள் வருவாய் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, இந்த வருடத்தில் ஏற்றுமதி மூலம் 5 கோடி அமெரிக்க டொலர்களை வருவாயாக பெற முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தரக்கட்டுப்பாட்டுப்பரிசோதனை
இந்நிலையில், இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் மதுபானவகைகளின் தரக்கட்டுப்பாடுகளை பேணும் வகையில் சில செயற்பாடுகளை மேற்கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன் முதல் கட்டமாக தற்போது பரிசோதனை மற்றும் தர கட்டுப்பாட்டை பேணுதல் போன்றவற்றை திறம்பட முன்னெடுப்பதற்காகவும் இதற்காக ஆய்வுகூடம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
