யுத்த முடிவின் பின்னரும் மக்களிடத்தில் நிலைபெறாத அமைதி! மன்னாரில் பிரதமர் உருக்கம்
யுத்தம் முடிவடைந்து பல வருடங்கள் கடந்த பிறகும், மக்களின் இதயங்களுக்கு அமைதி முழுமையாக வந்துள்ளதா என்பது இன்னும் ஒரு கேள்வியாகவே உள்ளது என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட மகளிர் கூட்டத்தில் உரையாற்றும் போது பிரதமர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் தனது கருத்துக்களைத் தெரிவித்த பிரதமர், பொதுமக்களிடம் கலந்தாலோசிக்காமல் போர் தொடங்கப்பட்டாலும், அதன் விளைவாக எழுந்த இனவெறி மற்றும் வன்முறையால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள்தான் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
துன்பப்படும் மக்கள்
போரின் போது மக்களைப் பிரித்து நாட்டில் அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள் இன்றும் மிகவும் வசதியான வாழ்க்கையை வாழ்ந்து வரும் நிலையில், அன்று பிளவுபட்ட சாதாரண மக்கள் இன்றும் துன்பப்படுகிறார்கள் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் இனவெறிக்கு எதிராக வலுவான போராட்டத்தை நடத்தி வருகிறது, அப்படியிருந்தும், சில அரசியல் சக்திகள் இன்னும் அதிகாரத்தைப் பெறுவதற்கான ஒரே வழியாக இனவெறி மற்றும் முரண்பாடுகளை உருவாக்க முயற்சிப்பதாக பிரதமர் வெளிப்படுத்தியுள்ளார்.
"அவர்கள் ஊழலை ஒழிக்க விரும்பவில்லை, ஜனநாயகத்தை உருவாக்க விரும்பவில்லை, அவர்களுக்கு சட்டம் அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்தப்படுவது முக்கியமல்ல. மக்களின் பொருளாதாரத்தைப் பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை," என்றும் பிரதமர் ஹரிணி கூறியுள்ளார்.
மேலும், அவர்களுக்கு மக்களுக்கு சேவை செய்ய அதிகாரம் தேவையில்லை, மாறாக சொந்த வாழ்க்கையை வளப்படுத்த மட்டுமே அதிகாரம் தேவை என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், மக்களிடையே மீண்டும் முரண்பாடுகளை உருவாக்க இதுபோன்ற சக்திகளின் முயற்சிகள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |