நாடளாவிய ரீதியில் 20 மில்லியன் கொள்ளை...! சிக்கிய முன்னாள் இராணுவ வீரர்கள்
நாட்டின் பல பகுதிகளில் உள்ள வீடுகளை உடைத்து 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள ரொக்கப் பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையடித்த பிரதான மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி தலைமையகக் காவல்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்தக்கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடமிருந்து ஐஸ் போதைப்பொருளும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சிறப்புப் படைப்பிரிவு
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணைகளின்போது இக்கும்பலில் உள்ள இருவர் இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவான கொமாண்டோ படையில் பணியாற்றிய முன்னாள் வீரர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இவர்கள் மூவரும் இணைந்தே நாடளாவிய ரீதியில் இந்தப்பாரிய கொள்ளைச் சம்பவங்களை அரங்கேற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள கொள்ளைக் கும்பலின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர் ஹங்குராங்கெத்த பகுதியைச் சேர்ந்த முன்னாள் இராணுவ கொமாண்டோ வீரர் எனவும் மற்றையவர் பேராதனை, முருத்தலாவ பகுதியைச் சேர்ந்த முன்னாள் இராணுவ கொமாண்டோ வீரர் எனவும் காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்தக் குழுவினர் கெக்கிராவை, கினிகத்தேனை, பேராதனை, திறப்பனை மற்றும் அநுராதபுரம் போன்ற பல பகுதிகளில் இருந்து மாத்திரம் 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள தங்க நகைகளைக் கொள்ளையடித்துள்ளனர்.
திருடப்பட்ட நகைகள்
அவ்வாறு திருடப்பட்ட நகைகள் பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றில் சிலவற்றை விசேட காவல்துறை குழுவினர் மீட்டுள்ளனர்.
பேராதனை காவல் பிரிவுக்குட்பட்ட ஒரு வீட்டுக்குள் புகுந்த இக்கும்பல், அங்கிருந்து 2.8 மில்லியன் ரூபா ரொக்கப் பணத்தையும் மற்றும் 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள தங்க நகைகளையும் கொள்ளையடித்துள்ளனர்.

கினிகத்தேனை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 4.8 மில்லியன் ரூபா மதிப்புள்ள தங்க நகைகளும், மற்றொரு வீட்டில் இருந்து பல பெறுமதியான பொருட்களும் திருடப்பட்டுள்ளன.
திறப்பனை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 3.2 மில்லியன் ரூபா ரொக்கப் பணம் திருடப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை
கெக்கிராவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகுந்து தங்க நகைகளைக் கொள்ளையடித்த இந்தக் கும்பல், அதே பகுதியில் உள்ள மற்றொரு வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளது.
அங்கு வசித்தவர்களின் கை, கால்களைக் கட்டி வாயைப் பொத்தி கொடூரமான முறையில் அச்சுறுத்தி அங்கிருந்த சொகுசு கார் மற்றும் பல பொருள்களைக் கொள்ளையடித்துத் தப்பியோடியுள்ளனர்.

மீட்கப்பட்ட தங்க நகைகள் மற்றும் ஏனைய பொருள்கள், கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியிருந்த அந்தந்தப் பகுதி காவல் நிலையங்களில் சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மூவரையும் கண்டி நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்குக் கண்டி தலைமையகக் காவல்துறையினர் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 18 மணி நேரம் முன்