நெருங்கும் சாதாரண தரப் பரீட்சை : பரீட்சை திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பான அனைத்து வகுப்புகளும் நாளை (11) நள்ளிரவு முதல் தடை செய்யப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் (DOE) அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை முதல் பரீட்சை முடியும் வரை இந்தத் தடை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாடம் தொடர்பான விரிவுரைகள், கருத்தரங்குகள், பட்டறைகள் மற்றும் அனைத்து வகையான விளம்பர நடவடிக்கைகளும் இதில் உள்ளடங்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்
இந்த சட்டத்தை மீறும் அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தில் அல்லது 119 காவல்துறை அவசர தொலைபேசி எண் மூலமாகவோ அல்லது பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 தொலைபேசி எண் மூலமாகவோ முறைப்பாடுகளை அளிக்கலாம் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே தெரிவித்தார்.
பரீட்சை நிலையங்கள்
இந்த நிலையில் 382,249 பாடசாலை பரீட்சார்த்திகளும் 69,214 தனியார் பரீட்சார்த்திகளும் விண்ணப்பித்துள்ள நிலையில் மொத்த பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை 451,463 ஆக பதிவாகியுள்ளதாக என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெப்ரவரி 17 முதல் பெப்ரவரி 26 வரை, நாடு முழுவதும் உள்ள 3,545 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |