இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற இனப்படுகொலையை வெறுமனே மனித உரிமை மீறல்கள் என அறிக்கையிட்டுள்ள நிபுணர்கள்!
இலங்கையின் பொறுப்புக் கூறல் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் நிபுணர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இலங்கைத் தீவில் இடம்பெற்ற போர் நடவடிக்கைகள் மற்றும் அதன் பின்னரான செயற்பாடுகள் குறித்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் ஜெனிவா மனித உரிமைச் சபையிடமே இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் செயற்படும் ஜெனிவா மனித உரிமைச் சபையின் இலங்கை தொடர்பான செயற்பாடுகளை அவதானித்து வரும் 20 பேர் அடங்கிய இந்த நிபுணர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பொறுப்புக்கூறல் குறித்து இலங்கையின் அக்கறையீனம் தொடர்பாகக் கவலை வெளியிட்டுள்ளனர்.
தென்னாபிரிக்க சுதந்திர போரட்ட வீரர் ஆர்ச் பிஷப் டெஸ்மண்ட் டுட்டு மற்றும் ஐ.நா முன்னாள் பொதுச் செயலாளர் பாங்கி மூன், முன்னாள் ஜக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர்கள், கொலம்பியாவின் முன்னாள் ஜனாதிபதி யுவன் மனுவல் சன்டோஸ் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் பிரதி செயலாளர் ஜன் எலியசன் ஆகியோர் உள்ளிட்ட 20 பேர் இந்த நிபுணர்குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
ஜெனிவா மனித உரிமைச் சபையின் ஆணையாளர் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் இலங்கை பொறுப்புக் கூறலில் இருந்து விலகவிட்டதென்பதை காணக்கூடியதாக இருப்பதாகவும் அந்த நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பொறுப்புக் கூறுவதில் இலங்கையின் கடந்தகால செயற்பாடுகள் கவலையளிப்பதாகவும் ஆணையாளர், உறுப்பு நாடுகளுக்கு வழங்கியுள்ள பரிந்துரைகளை இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்கப்பட வேண்டுமெனவும் நிபுணர்கள் குழு ஆலோசனை வழங்கியுள்ளது.
சமீபகாலமாக உருவாகி வரும் அணுகுமுறைகள், செயற்பாடுகள் பற்றி ஆய்வு செய்த இந்த நிபுணர்குழு இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், அநீதிகள் ஆகியவற்றுக்கான நீதி கிடைக்க வேண்டுமென்பதில் தமது ஆலோசனைகளையும் முன்மொழிந்துள்ளனர். அதேவேளை, இந்த நிபணர்குழு இலங்கையில் போர்க்காலத்தில் இடம்பெற்ற கொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட விடயங்களை வெறுமனே மனித உரிமை மீறல் என்றே தமது அறிக்கையில் கூறுகின்றனர்.
ஆனால் இலங்கைத் தீவில் ஈழத்தமிர்களுக்கு எதிரான இலங்கை ஒற்றையாட்சி அரசு இனப்படுகொலை நடத்தியது என்றோ அல்லது இனப்படுகொலைகள் இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகங்களையோ இந்த நிபுணர்குழு தமது அறிக்கையில் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.