'ஒரே நாடு ஒரே சட்டம்' செயலணியின் பதவிக்காலம் நீடிப்பு
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் பதவிக்காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 33 ஆம் உறுப்புரையின் ஊடாக அரச தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய இலங்கைக்குள் 'ஒரே நாடு - ஒரே சட்டம்' என்ற கொள்கையை செயற்படுத்தும் வரைபை தயாரிப்பதற்கு பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் 13 பேர் அடங்கிய விசேட அரச தலைவர் செயலணி ஒன்று உருவாக்கப்பட்டது.
ஏற்கனவே இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வந்தவரும், அதன் காரணமாக பல்வேறு தரப்பினரின் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்த ஞானசார தேரர் தலைமையில் இந்தச் செயலணி ஸ்தாபிக்கப்பட்டமை பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், குறித்த செயலணியின் பதவிக்காலம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் பணிப்புரைக்கு அமைய, அரச தலைவரின் செயலாளர் காமினி செனரத் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நேற்றைய தினம் வெளியிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான அரச தலைவர் செயலணிக்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைய இருந்தது.
நாட்டின் சகல மாகாணங்களையும் உள்ளடக்கிய பொதுமக்கள் மற்றும் நிபுணர்கள் குழுவின் கருத்துக்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதாலேயே அரச தலைவர் செயலணியின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.