நள்ளிரவில் நடந்த கொடூரம்: மனைவியை வெட்டி கொன்ற கணவர்
மொனராகலையில் (Moneragala) குடும்பப் பெண் ஒருவர் வாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் மொனராகலை மாவட்டம், பிபிலை பிரதேசத்தில் நேற்று (19) இடம்பெற்றுள்ளது.
மேற்படிப் பெண்ணை அவரின் கணவனே வெட்டிப் படுகொலை செய்துள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பெண்ணின் கணவன்
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் கூலி வேலைக்குச் சென்ற மேற்படி பெண்ணின் கணவன், நேற்று மாலை வேலை முடிந்து வீட்டுக்கு மது போதையில் வந்துள்ளார்.
இதன்போது அவருக்கும் மனைவிக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
நிறை போதையில் இருந்த கணவன், வீட்டில் வைத்திருந்த வாளால் மனைவியை வெட்டி விட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
படுகாயமடைந்த மனைவி
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த மனைவி வீட்டுக்குள் இரத்த வெள்ளத்தில் வீழ்ந்து கிடந்துள்ளார்.
அவரின் ஐந்து மற்றும் ஏழு வயதுடைய இரண்டு பிள்ளைகளின் கதறல் சத்தத்தால் வீட்டுக்கு வந்த அயலவர்கள், படுகாயங்களுடன் இரத்த வெள்ளத்தில் கிடந்த தாயை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இருப்பினும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் பிள்ளைகள் இருவரையும் பொறுப்பேற்றதுடன் தாயைக் கொலை செய்துவிட்டுத் தலைமறைவான தந்தையைக் கைது செய்வதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
