தமிழர் தாயக கோட்பாட்டை சிதைக்க தூரநோக்கு வேலைத்திட்டம்?
தமிழர் தாயக கோட்பாட்டை சிதைக்க கன கச்சிதமாக, தூர நோக்கோடு வேலைத்திட்டம் ஒன்று முல்லைத்தீவு கொக்கிளாய் வீதியில் மணலாறு திருப்பும் மூன்று சந்தியில் இடம்பெற்று வருவதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
முல்லைத்தீவிலிருந்து கொக்கிளாய் செல்லும் பாதையில்( 13 ஆம் கட்டைச் சந்தியில்) செழிப்பாக வளர்ந்து வந்த வேம்பு மரம் ஒன்றை வெட்டி அகற்றிவிட்டு, அரச மரக்கன்று ஒன்று அதே இடத்தில் வைக்கப்பட்டு பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வருவதாக மக்கள் கூறுகின்றனர்.
இந்த வேம்பு மரத்திற்கு ஆதாரமாக 2016 ஆம் ஆண்டு google street view காணப்படுகின்ற நிலையில், எதிர்காலத்தில் அவ்விடத்தில் புத்தர் சிலை ஒன்றை வைப்பதற்கான முன்னாயத்தமாக இது இருப்பதாக பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
13 ஆம் கட்டை சந்தி என தமிழ் மக்களால் அழைக்கப்பட்டு வந்த இச்சந்தி இப்போது படையினரால் ஹாகம்பகஸ் ஹந்தி என பெயர் மாற்றப்பட்டு அழைக்கப்பட்டு வருவதோடு, அந்தச் சந்தியை சூழவுள்ள பகுதிகளில் 3 பாரிய படை முகாம்கள் கடந்த 10 வருடத்துக்கு மேலாக அமைக்கப்பட்டு காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் பகுதி கொக்குத்தொடுவாய் கிராமத்துக்கு மிக அண்மையாகவுள்ள பகுதியாக இருப்பதோடு, இப்பகுதியை சூழவுள்ள காணிகள் பல வன திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், தொல்லியல் திணைக்களம், கனிய மணல் கூட்டு தாபனம் ஆகியவற்றால் ஏற்கனவே அபகரிக்கப்பட்டுள்ள பகுதியாகவும் காணப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.