பொன்சேகாவின் பீல்ட் மார்ஷல் பதவி தொடர்பில் முடிவு எடுங்கள்: ரணிலிடம் கோரிக்கை
முன்னாள் இராணுவ தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா வகிக்கும் பீல்ட் மார்ஷல் பதவி தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுக்குமாறு அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 09 ஆம் திகதி காலிமுகத்திடலில் மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு சரத் பொன்சேகா அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
இதன் போது அவர் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் கவனத்திற்கு கொண்டு வந்து அவர்கள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.
மக்களை தூண்டும் பொன்சேகா
இறுதியான போராட்டத்திற்கு கொழும்புக்கு வருமாறும் உயிர்களை தியாகம் செய்தேனும் போராட்டத்தை வெல்ல வேண்டும் எனவும் பொன்சேகா கூறியிருந்தார்.
எனினும், அவரது கோரிக்கைக்கு அமைய போராட்டத்திற்காக மக்கள் காலிமுகத்திடலுக்கு வரவில்லை. ஆனால் மக்களை தூண்டி விடும் வகையில் பொன்சேகா கருத்து வெளியிட்டுள்ளதாக அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பீல்ட்மார்ஷல் பதவி
விடுதலைப்புலிகளுக்கு எதிராக இடம்பெற்ற போரில் இராணுவ தளபதியாக கடமையாற்றிய சரத் பொன்சேகாவுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன அதிபராக பதவிக்கு வந்த பின்னர் இராணுவத்தின் மிக உயர்ந்த பதவியான பீல்ட் மார்ஷல் பதவியை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.