ராணியின் பூதவுடல் அஞ்சலிக்காக! கண்ணீரால் நனையும் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபம் - அலையென திரளும் மக்கள் (நேரலை)
பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் உடல் தற்போது வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் மகாராணி 2 ஆம் எலிசபெத் கடந்த 8 ஆம் திகதி 96 ஆவது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
பொது மக்கள் அஞ்சலி
மகாராணி உடல் அவர் உயிர்பிரிந்த பால்மோரல் பண்ணை மாளிகையில் இருந்து கடந்த 11 ஆம் திகதி, ஸ்கொட்லாந்தின் தலைநகரான எடின்பரோ நகருக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஸ்கொட்லாந்து கொண்டு செல்லப்பட்ட மகாராணியின் உடல், அரச குடும்பத்தினர் அஞ்சலி செலுத்துவதற்கக்காக அங்குள்ள ஹோலிரூட் ஹவுஸ் மாளிகையில் வைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மகாராணியின் உடல் ஸ்கொட்லாந்து செயிண்ட் கில்ஸ் தேவாலயத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின்னர் ஸ்கொகாட்லாந்தில் இருந்து விமானம் மூலம் 2-ம் எலிசபெத்தின் உடல் நேற்று இரவு இங்கிலாந்துக்கு கொண்டு சென்று மன்னர் சார்லசிடமும், ராணி கமிலாவிடமும் ஒப்படைக்கப்பட்டது.
பக்கிங்ஹாம் அரண்மனைக்கு ராணியின் உடல்
பின்னர் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் 2-ம் எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு 'பவ்' அறையில் அரண்மனை அதிகாரிகளும், பணியாளர்களும் ராணிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
அதன்பின் ராணியின் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக பீரங்கி வண்டியில் ஏற்றப்பட்டு இராணுவ மரியாதை அளிக்கப்பட்டு, பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்துக்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படுகிறது.
தற்போது வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் ஒரு மேடையில் ராணியின் பூதவுடல் தாங்கிய பேழை பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.