கத்தியில் கைரேகைகள்: ரங்க நிஷாந்தவின் பிரேத பரிசோதனையில் சந்தேகம் - உதய கம்மன்பில
நிதி அமைச்சின் உதவிப் பணிப்பாளர் ரங்க நிஷாந்தவின் மரணம் மற்றும் அது தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை என்பன பாரிய சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளன என்று பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவர் சட்டத்தரணி உதய கம்மன்பில தெரிவித்தார்.
எதுல்கோட்டையிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.
ரங்க நிஷாந்தவின் மரணம் தற்கொலையாக இருக்கலாம் என மருத்துவக் குழு முடிவெடுத்துள்ள போதிலும், அது ஒரு முழுமையான பரிசோதனை அல்ல என்றும் கம்மன்பில சுட்டிக்காட்டினார்.
நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகியுள்ளது
அவர் மேலும் தெரிவிக்கையில், "திசுக்கயியல் மற்றும் நச்சியியல் பரிசோதனைகளின் முடிவுகள் வருவதற்கு முன்னரே தவறான முடிவெடுத்து மரணம் என முடிவெடுத்தது ஏன்?

கத்தியில் இருந்த கைரேகைகள் மற்றும் ஆடைகளில் இருந்த இரத்தக் கரைகள் ரங்க நிஷாந்தவுக்கு உரியவைதானா என்பது உறுதிப்படுத்தப்பட்டதா?
சம்பவம் நடந்த ஆரம்பத்திலேயே இது தவறான முடிவெடுத்து மரணம் எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்த நிலையில், மருத்துவக் குழுவினர் அரசியல் அழுத்தங்களுக்கு உள்ளாகினார்களா? மருத்துவக் குழுவில் அரசின் ஆதரவாளர்கள் உள்வாங்கப்பட்டுள்ளதால் அதன் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகியுள்ளது.
வெளிநாட்டு கணினி குற்றவாளிகள்
எனவே சிரேஷ்ட சட்ட வைத்திய அதிகாரிகள் மூவர் அடங்கிய புதிய சுயாதீனக் குழுவொன்றின் ஊடாக மீளவும் பரிசோதனை நடத்தப்பட வேண்டும்." - என்றும் அவர் வலியுறுத்தினார்.

இலங்கையில் அண்மைக்காலமாக வெளிநாட்டு கணினி குற்றவாளிகள் அதிகளவில் கைது செய்யப்படுகின்றமை குறித்தும் இதன்போது அவர் கவலை வெளியிட்டார். "
கடந்த நான்கு மாதங்களில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு கணினி குற்றவாளிகள் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2024 ஆம் ஆண்டில் 7 ஆயிரத்து 210 ஆக இருந்த கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள், 2025 ஆம் ஆண்டில் 12 ஆயிரத்து 650 ஆகப் பாரியளவில் அதிகரித்துள்ளன. இலங்கை இவ்வாறான சர்வதேச குற்றவாளிகளின் புகலிடமாக மாறி வருவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்." - என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |