இன்றைய நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம் : விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள்
புதிய இணைப்பு
இன்றைய (04.08.2026) நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளன.
காலை 09.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வு மாலை 05.30 வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
09.30 முதல் 10.00 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் நாடாளுமன்ற அலுவல்களுக்கம் 10.00 முதல் 11.00 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
11.00 முதல் 11.30 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 11.30 முதல் 5.00 வரை 2026 இன் 03 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு இடம்பெறவுள்ளதுடன் அரசியலமைப்பின் கீழ் தீர்மானம் அங்கீகரிக்கப்படவுள்ளது.
5.00 முதல் 5.30 வரை அரசாங்கத்தின் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணைக்கு ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
ஓகஸ்ட் மாதத்தின் முதலாவது நாடாளுமன்ற வாரம் இன்று (04) ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்று முதல் எதிர்வரும் 7ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கூடவுள்ளதாக நாடாளுமன்ற பொதுச்செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுத் தொடர்பான குறைநிரப்பு மதிப்பீட்டு மற்றும் சம்பளம் தீர்மானிக்கப்படுதல் தொடர்பான தீர்மானம் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
நாளை (05) அவுஸ்திரேலியாவுக்கு அமெரிக்க டொலர் 2.5 மில்லியன் கடன் மீள செலுத்தப்பட்டமை சம்பந்தமான சைபர் குற்றச்செயலுடன் தொடர்புடைய மோசடி குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவினது அறிக்கை தொடர்பில் எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெறும்.
தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபை
வியாழக்கிழமையன்று தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபை திருத்தச் சட்டமூலம் மற்றும் விலங்குகள் திருத்தச் சட்டமூலம் ஆகிய இரண்டு சட்டமூலங்கள் தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்றப் பொதுச்செயலாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று 7 தனிநபர் உறுப்பினர் முன்மொழிவுகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
இதேவேளை, நீதித் துறையில் உள்ள பிரச்சினைகள் குறித்து கண்டறிவதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு கோரி எதிர்க்கட்சியினர் இன்றைய தினம் சபாநாயகரிடம் முன்மொழிவொன்றைக் கையளிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
எதிர்க்கட்சியின் எதிர்பார்ப்பு
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழுவினர் குறித்த முன்மொழிவில் நேற்று (03) கையொப்பமிட்டுள்ளதுடன், அதற்கு எதிர்க்கட்சியின் ஏனைய கட்சிகளின் ஆதரவையும் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கிக் கிடப்பது, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது, சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசல் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து கண்டறிவதற்காகவே இந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிப்பதற்கான முன்மொழிவு சமர்ப்பிக்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |