பாடசாலை ஒன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கிக்கொண்ட மாணவர்கள்! 5 பேர் வைத்தியசாலையில்
அனுராதபுரம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஐந்து மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் அனுராதபுரம் மாவட்டத்தின் எப்பாவல பகுதியில் இன்று (13.05.2026) இடம்பெற்றுள்ளது.
இதன்படி காயமடைந்த மாணவர்கள் எப்பாவல தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆரம்பகட்ட விசாரணை
இவ்வாறு காயமடைந்தவர்கள், குறித்த பாடசாலையின் 12 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் நடந்த அதே பாடசாலையின் 12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவரே கூரிய ஆயுதத்தை கொண்டு இந்த தாக்குதலை மேற்கொண்டதாக எப்பாவல காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவத்திற்கு முன்னர், தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் மாணவருக்கும் காயமடைந்த மாணவர்களில் ஒருவருக்கும் இடையே சில நாட்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அந்த மோதலுக்குப் பழிவாங்கும் நோக்கில் இன்று (13) கூர்மையான ஆயுதத்துடன் பாடசாலைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தப்பட்டதாக காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
காவல்துறையினர் கைது
தாக்குதலைத் தடுக்க முயன்ற மற்றொரு மாணவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அதனால் மேலும் நான்கு மாணவர்கள் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்திற்குப் பின்னர், குறித்த மாணவரை சம்பவத்திற்கு பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதத்துடன் எப்பாவல காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக எப்பாவல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |