உணவு பற்றாக்குறை ஏற்படுவது உறுதி - பதவி நீக்கப்பட்ட செயலாளர் மீண்டும் ஆணித்தரம்
இலங்கையில் எதிர்காலத்தில் உணவு பற்றாக்குறை ஏற்படுவது உறுதியாகும் என பதவி நீக்கப்பட்ட விவசாய அமைச்சின் முன்னாள் செயலாளர் பேராசிரியர் உதித் ஜயசிங்க(Prof. Uditha K. Jayasinghe) மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள தனியார் வானொலியொன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
எமக்கு தெரிந்த விஞ்ஞானம் மற்றும் கணிப்பின்படி, உணவு பற்றாக்குறை ஒன்று ஏற்படும் என்றும், தற்போதைய நிலைமையில் அது உறுதியானதாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, அப்படியான நிலைமை வரும் வரை பார்த்துக்கொண்டிருக்காமல், தற்போதே சில சில தீர்மானங்களை எடுக்க வேண்டும். வீட்டுத் தோட்டம் அமைக்கும் முறைமை, எதனை இறக்குமதி செய்ய வேண்டும்? எவற்றுக்கு இறக்குமதி கட்டுப்பாடு விதிக்க வேண்டும், பொருள் பரிமாற்ற சந்தை ஒன்றை ஏற்படுத்திக்கொள்வதா? இந்தியாவுடன் பரிமாற்ற முறைமைக்கு சென்றுள்ளோமா என்பன தொடர்பில் அவதானம் செலுத்துவது சிறந்ததாகும்.
இல்லாவிட்டால், இறுதி சந்தர்ப்பத்தில் வந்து, காலையில் உண்ண வேண்டாம், இரவு உண்ண வேண்டாம், இளைஞர்கள் உண்ண வேண்டாம் என கூறவேண்டிய நிலை தங்களுக்கு ஏற்பட்டால், அது பிரச்சினையானதாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.