வெளிநாட்டுப் பறவை இனங்கள் அம்பாறை மாவட்டத்தில் சஞ்சரிப்பு (படங்கள்)
காலநிலை மாற்றத்தின் காரணமாக வெளிநாட்டு பறவை இனங்கள் தற்போது அம்பாறை மாவட்டத்தில் சஞ்சரிப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
பெரிய நீலாவணை சம்மாந்துறை நாவிதன்வெளி நிந்தவூர் ஆகிய பிரதேசங்களில் உள்ள நீர் நிலைகளை நாடி இந்த வெளிநாட்டு பறவை இனங்கள் வருகை தருகின்றன.
இதனால் வெளிநாட்டிலிருந்து வரும் குறித்த பறவையினங்களை ரசிப்பதற்காக பலரும் குறித்த இடத்திற்கு வருவதோடு அங்கு புகைப்படம் எடுப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வெளிநாட்டுப் பறவைகள்
இம் மாதக் கடைசியில் பல நாட்டுப் பறவைகளும் இங்கு வந்து தங்குகின்றன. இங்கு வரும் வெளிநாட்டுப் பறவைகள் ஜனவரி, பெப்ரவரி மாதம் கூடு கட்டத் துவங்கும்.
மேற்குறித்த பறவைகள் 3000 மைல் தூரம் பறந்து செல்லும் வல்லமை படைத்தவை. அவுஸ்திரேலியா , சுவிட்சர்லாந்து, ரஷ்யா, ஜெர்மனி, பிலிப்பைன்ஸ், சைபிரியா ஆகிய நாடுகளிலிருந்து பறவைகள் இங்கு வருகின்றன.
வலசை வந்து ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதம் வரை தங்கி குஞ்சு பொரித்து பிறகு அவற்றுடன் பறந்து செல்கின்றன. 23 க்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு வந்து கூடு கட்டுவதாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டனர்.
இதில் நாரை இனங்கள், அன்னப்பறவை உள்ளிட்ட வலசை பறவையினங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.