கொலை குற்றச்சாட்டு! முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட மூவருக்கு வெளிநாட்டு பயணத் தடை
கொலைக்குற்றம் சாட்டப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர மற்றும் மேலும் மூன்று பிரதிவாதிகள் வெளிநாடு செல்வதற்குத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரதம நீதிபதி பிரீத்தி பத்மன் சுரசேன, அச்சலா வெங்கப்புலி மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதுடன், இந்த பயணத் தடை குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, பிரேமலால் ஜெயசேகர உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கும் ஒக்டோபர் 21 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவிப்புகள் அனுப்பப்பட வேண்டும் என்றும் அந்த அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மரண தண்டனை
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது, அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் பேரணியில் துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரைக் கொலை செய்ததற்காக, பிரேமலால் ஜெயசேகரவுக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

அதனைதொடர்ந்து, மரண தண்டனைக்கு எதிராக பிரேமலால் ஜெயசேகர மற்றும் பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், அவர்களை விடுவித்து விடுதலை செய்ய உத்தரவிட்டிருந்தது.
நீதிமன்ற உத்தரவு
இந்நிலையில், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டத்திற்கு முரணானது என்றும், அதை ரத்து செய்து தண்டனை விதிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரி, பாதிக்கப்பட்ட தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அதன்படி, தலைமை நீதிபதி தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில், இந்த மனு இன்று (04) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இவ்வாறானதொரு பின்னணியில், சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார விடுத்த கோரிக்கையைப் பரிசீலித்த பின்னர், மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு மேற்படி வெளிநாடு செல்வதற்குத் தடை விதித்து உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |